மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி விழாவின் ஏழாம் நாளான புதன்கிழமை இரவு உற்சவர் மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.
சிவகங்கை தேவஸ்தான நிர்வாகத்துக்கு உள்பட்ட மானாமதுரை ஆனந்தவல்லி அம்பாள் சமேத சோமநாதர் சுவாமி கோயிலில் நவராத்திரி விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி அம்மன் சன்னதி முன் மண்டபம் முழுவதும் மின்விளக்கு அலங்காரம் செய்து ஜொலிக்கிறது.
தினமும் மூலவர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். உற்சவர் ஒவ்வொருநாளும் வெவ்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
அதன்படி, நவராத்திரி விழாவின் ஏழாம் நாளான புதன்கிழமை இரவு ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். மூலவருக்கும், உற்சவருக்கும் சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன.
அதைத் தொடர்ந்து துர்க்கை அம்மனுக்கு பூஜைகள் நடத்தப்பட்டது. ஏராளமானோர் கோயிலுக்கு வந்து ஆனந்தவல்லி அம்மனை தரிசனம் செய்தனர்.