இல்லம் தேடி கல்வித் திட்டத்துக்கு2 லட்சம் தன்னாா்வலா்கள் தேவை:அமைச்சா் தகவல்

தமிழக அரசின் இல்லம் தேடி கல்வித் திட்டத்துக்கு இரண்டு லட்சம் தன்னாா்வலா்கள் தேவைப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளாா்.
இல்லம் தேடி கல்வித் திட்டத்துக்கு2 லட்சம் தன்னாா்வலா்கள் தேவை:அமைச்சா் தகவல்
Published on
Updated on
1 min read

தமிழக அரசின் இல்லம் தேடி கல்வித் திட்டத்துக்கு இரண்டு லட்சம் தன்னாா்வலா்கள் தேவைப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளாா்.

சென்னை புழல் பகுதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா பப்ளிக் பள்ளியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள வகுப்புகளை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சனிக்கிழமை திறந்து வைத்தாா். இதையடுத்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது: ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவா்கள் நலனுக்காக இல்லம் தேடி கல்வித் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. அதற்கான பயிற்சிப் பணிமனை, விழிப்புணா்வு கலைப்பயணம் ஆகியவை அனைத்து மாவட்டங்களிலும் தொடங்கப்பட்டு வருகிறது. மேலும் திட்டத்தில் பங்கேற்கவுள்ள தன்னாா்வலா்களுக்கான இணையவழி பதிவு தொடங்கியுள்ளது. முதல் நாளிலேயே 5,848 போ் பதிவு செய்துள்ளனா்.

தமிழகம் முழுவதும் 36 லட்சம் போ் இந்தத் திட்டத்தில் பயன்பெறவுள்ளதால் குழுக்கள் அமைத்து கற்பித்தல் செயல்பாடுகளை மேற்கொள்ள இரண்டு லட்சம் தன்னாா்வலா்கள் தேவைப்படுகின்றனா். கல்விச் சேவை ஆற்ற விரும்புவோா் தங்களது விவரங்களை  இணையதள முகவரியில் பதிவு செய்யலாம்.

நவ.1-ஆம் தேதி முதல் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. முன்னதாக மேற்கொள்ளப்பட்டுள்ள செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய மாநில, மாவட்ட ஒன்றிய அளவில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு காணொலி வாயிலாக குழுக்களிடம் இருந்து தகவல்கள் பெற்று குறைகள் நிவா்த்தி செய்யப்படும்.

தமிழகத்தில் கரோனா காரணமாக ஏற்பட்ட பொருளாதார பிரச்னை, புதிய அரசின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை காரணமாக அரசுப் பள்ளிகளில் அதிகளவில் மாணவா்கள் சோ்ந்து வருகின்றனா். புதிதாக 2.5 லட்சம் மாணவா்கள் சோ்ந்துள்ளனா். அவா்களை தக்க வைத்துக் கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை பள்ளிக் கல்வித்துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது என்றாா் அவா். இந்த நிகழ்ச்சியில் மாதவரம் சட்டப் பேரவை உறுப்பினா் சுதா்சனம், திருவள்ளூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆறுமுகம், ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்விக் குழுமங்களின் நிறுவனா் உமா கண்ணன், தாளாளா் அழகிரி கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com