கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்ட மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் டிரைவரான கனகராஜ் குடும்பத்தினரிடம் தனிப்படை போலீசார் மீண்டும் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
தொடர்ந்து 2017 ஏப்ரல் மாதத்தில், ஊட்டியை அடுத்த கொடநாடு பகுதியிலுள்ள ஜெயலலிதாவிற்கு சொந்தமான எஸ்டேட்டில், நடந்த கொள்ளைச் சம்பவத்தில் அங்கு காவல் பணிகளில் ஈடுபட்டிருந்த ஓம் பகதூர் என்ற காவலாளி கொலை செய்யப்பட்டார்.
கொலை, கொள்ளை வழக்கில் போலீசார் ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவரான எடப்பாடி பகுதியைச் சேர்ந்த கனகராஜ் மற்றும் கேரளாவைச் சேர்ந்த அவரது கூட்டாளிகளை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதனிடையே, சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் கனகராஜ் உயிரிழந்தார். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம் மீண்டும் சூடு பிடித்துள்ளது.
பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வரும் தொடர் விசாரணையின் ஒரு பகுதியாக, வெள்ளியன்று, எடப்பாடி அடுத்த புதுப்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட, சித்திர பாளையம் பகுதியில் உள்ள கனகராஜன் வீட்டிற்கு வந்த தனிப்படை
போலீசார், ஆங்கிருந்த கனகராஜன் குடும்ப உறுப்பினர்களிடம் கனகராஜ் குறித்தும் அவர் உயிரிழந்த சம்பவம் குறித்தும் விசாரணை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து கனகராஜன் சகோதரர்களான தனபால், பழனிவேல் ஆகிய இருவரையும் தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஜனகராஜ் வீட்டருகே உள்ளூர் போலீசார் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.