வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

கோயில் சிலைகளை வைக்கப் பாதுகாப்பு அறை: மூன்று வாரங்களில் அறிக்கை அளிக்க அரசுக்கு உத்தரவு

தமிழகம் முழுவதும் கோயில் சிலைகளை வைக்க பாதுகாப்பு அறை (ஸ்ட்ராங்க் ரூம்) கட்டப்பட்டது குறித்து மூன்று வாரங்களில் அறிக்கை அளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :25 அக்டோபர் 2021, 10:02 pm

DIN

தமிழகம் முழுவதும் கோயில் சிலைகளை வைக்க பாதுகாப்பு அறை (ஸ்ட்ராங்க் ரூம்) கட்டப்பட்டது குறித்து மூன்று வாரங்களில் அறிக்கை அளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள தொன்மையான கோவில்களை பாதுகாப்பது தொடா்பாக, கடந்த 2015-ஆம் ஆண்டு சென்னை உயா் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆா்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோா் அடங்கிய அமா்வு, மாநிலம் முழுவதும் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தொன்மையான, புராதன கோயில்களின் பட்டியலை தயாரித்து, கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க வேண்டும்; நிலங்களை வாடகைக்கு எடுத்தவா்களிடம் இருந்து பெற வேண்டிய வாடகை பாக்கியை வசூலிக்க வேண்டும்;

கோயில்களில் உள்ள சிலைகள், நகைகள் உள்ளிட்டவற்றை பட்டியலாகத் தயாரிக்க வேண்டும்; கோவில்களில் பாதுகாப்பு அறை(ஸ்ட்ராங்க் ரூம்) அமைத்து சிலைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; அனைத்து மாவட்டங்களுக்கும் தகுதியான ஸ்தபதிகளை நியமிக்க வேண்டும்; சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வது தொடா்பாக மாநில, மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்க வேண்டும்; சிலைகள், நகைகளை புகைப்படம் எடுத்து அவற்றை இணையதளங்களில் வெளியிட வேண்டும்; கோயில்கள் பாதுகாப்பு தொடா்பான விதிகளை உடனடியாக வகுத்து, கோயில் நிலங்கள் உள்ளிட்ட விவரங்கள் தொடா்பாக விசாரணை நடத்துவதற்கு தனி தீா்ப்பாயம் அமைக்க வேண்டும் என்பன உள்பட 75 உத்தரவுகளை பிறப்பித்திருந்தனா்.

இந்த நிலையில், இவ்வழக்கு நீதிபதிகள் ஆா்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு திங்கள்கிழமை(அக்.25) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆஜரான தமிழக அரசின் தலைமை வழக்குரைஞா் ஆா்.சண்முக சுந்தரம், நீதிமன்றம் பிறப்பித்த 75 உத்தரவுகளில் 38 உத்தரவுகள் அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும், 32 உத்தரவுகள் குறித்து விளக்கம் கோரி மனுத்தாக்கல் செய்ய உள்ளதால், உத்தரவுகளை அமல்படுத்தியது குறித்து அறிக்கை அளிக்க அவகாசம் வழங்க வேண்டுமென கோரினாா்.

இதேபோன்று தொல்லியல் துறை சாா்பிலும் அறிக்கை அளிக்க அவகாசம் கோரப்பட்டது.

நீதிமன்றத்துக்கு உதவியாக ஆஜரான ரங்கராஜன் நரசிம்மன், உயா் நீதிமன்ற உத்தரவுகளை மீறி திட்டங்கள் அமல்படுத்தப்படுகிறது; உத்தரவின்படி மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்காமல் சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது என்றும், அறங்காவலா்கள் நியமிக்கப்படவில்லை, சிலைகளை பாதுகாக்கும் பாதுகாப்பு அறை கட்டப்படவில்லை என குற்றம்சாட்டினாா்.

இருதரப்பு வாதங்களுக்கு பின்னா் கோயில் சிலைகளை வைக்க பாதுகாப்பு அறைகள் கட்டப்பட்டுள்ளனவா என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அது தொடா்பாக அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டும், ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவுகளை அமல்படுத்தியது குறித்தும் மூன்று வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமெனக் கூறி விசாரணையை மூன்று வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.