கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் பயணிகளின் வசதிக்காக சூரிய சக்தியில் இயங்கும் மேம்படுத்தப்பட்ட புதிய பேருந்து நிறுத்த நிழற்கூடத்தை அ. செல்லக்குமார் எம்.பி. திறந்து வைத்தார்.
கிருஷ்ணகிரி ஆவின் மேம்பாலம் அருகே ரூ.13.50 லட்சம் மதிப்பில் இந்தியாவிலேயே முதன்முதலாக அதிநவீன நிழற்கூடம் திறக்கப்பட்டது. இந்த நிழல் கூடமானது சூரியசக்தியால் இயங்கக் கூடியது. இந்த நிழற்கூடமானது பயணிகளின் தகவலுக்காக டிஸ்பிளே போர்டு, எல்.இ.டி.டிவி வைஃபை போன்ற வசதிகள் கொண்டதாக இருக்கும்.
மேலும் மழை நீர் வடிகால் வசதியும் உள்ளது. சாலை விரிவாக்கத்தின்போது இந்த நிழற்கூடத்தை இடிக்காமல் அப்படியே வேறு இடத்திற்கு மாற்றி வைக்கும் வசதி கொண்டது. மேலும், எல்இடி டிவி மூலம் விளம்பரங்கள் செய்து சம்பந்தப்பட்ட ஊராட்சி, வருவாய் ஈட்ட வாய்ப்பு உள்ளது. இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் சேகர், யேசு துரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.