மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் இளையான்குடி காவல் நிலையத்தை ஞாயிற்றுக்கிழமை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இளையான்குடி அருகே லெட்சுமிபுரம் கிராமத்தில் வசிக்கும் வனிதா குடும்பத்தினர் கிராமத்தில் உள்ள நீர்நிலைகளை ஆக்கிரமித்து வைத்துள்ளதாக புகார்கூறி அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கிராம மக்கள் சேர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இதையடுத்து வனிதா லெட்சுமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த சிலர் மீது சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் செய்தார். அதன்பேரில் புகார் கூறப்பட்டவர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர்.
இளையான்குடி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தும்மகளிர் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் மற்றும் கிராம மக்கள்.
இந்நிலையில், வனிதா கொடுத்த பொய்யான புகார் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது, புகார் மனுவை வாபஸ் பெற வேண்டும், லெட்சுமிபுரம் கிராமத்தில் வசிக்கும் மக்களிடையே மோதல் போக்கை உருவாக்கும் வனிதா குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், கிராமத்தில் உள்ள நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி லெட்சுமிபுரம் கிராமத்தில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் மற்றும் கிராம மக்கள் இளையான்குடி காவல் நிலையத்திற்கு திரண்டு வந்து காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிக்க | தேவூர் தேவபுரீஸ்வரர் கோயிலில் சுவாமி, அம்பாள் சிலைகள் கண்டெடுப்பு!
இதையடுத்து போலீசார் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். வட்டாட்சியர் முன்னிலையில் சமரசக் கூட்டம் நடத்தி பிரச்னைக்கு தீர்வு காணலாம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் சமரசத்தை ஏற்காத கிராம மக்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.