குடியரசுத்தலைவர் வருகையையொட்டி சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 02.8.2021 ஆம் தேதி சென்னை வருகை புரிகிறார். 02.08.2021 அன்று மாலை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்ற பேரவை மண்டபத்தில் நடைபெறும் சட்டமன்ற நூற்றாண்டு விழாவில் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு, முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் திருவுருவ படத்தை திறந்து வைக்கிறார். பின்னர், சென்னையிலுள்ள தமிழக ஆளுநர் மாளிகையில் தங்கி, மறுநாள் (03.8.2021) காலை, தனிவிமானம் மூலம் நீலகிரி புறப்பட்டு செல்கிறார்.
அதன்பேரில், சென்னைக்கு வருகை தரும் மேதகு குடியரசுத் தலைவருக்கு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்வது குறித்து, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், காவல் அதிகாரிகளுடன் கலந்தாய்வு மேற்கொண்டு அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கினார்.
சென்னை விமான நிலையம், ஆளுநர் மாளிகை, தலைமைச் செயலக வளாகம், சட்டமன்ற மண்டபம் ஆகிய இடங்களில், காவல் ஆணையாளர் தலைமையில், சென்னை பெருநகர காவல் அதிகாரிகள், காவல் ஆணையர்கள், போக்குவரத்து காவல், கமாண்டோ படை வீரர்கள், தமிழ்நாடு சிறப்பு காவல் படை உள்ளிட்ட 5,000 காவல் துறையினருடன் 5 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவர் சென்னையில் செல்லும் வழித் தடங்களில், போக்குவரத்து காவல் துறையினருடன் இணைந்து தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொண்டு, அனைத்து இடங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.