அதிமுக முன்னாள் அமைச்சர்களைக் குறிவைத்து பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்று ஓபிஎஸ் -இபிஎஸ் இணைந்து கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புக் காவல்துறையினர் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிக்க |சென்னையில் வேலுமணியுடன் தொடர்புடைய 15 இடங்களில் சோதனை
இந்நிலையில் இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவரும் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் அமைப்பு செயலாளர், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடா முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்குச் சொந்தமான இடங்களிலும், அவருடன் தொடர்பில் இருப்பவர்கள் ஒரு சிலரின் இடங்களிலும் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்துவதாக வரும் செய்திகள், மக்கள் நலப் பணிகளில் முழு கவனம் செலுத்தாமல் திமுக அரசு கழகத்தவர்களை பழிவாங்கும் நடவடிக்கைகளில் அக்கறை காட்டுகிறது என்ற ஐயப்பாடும் வருத்தமும் மனதில் எழுகின்றன.
துடிப்பான கழகச் செயல்வீரர் எஸ்.பி. வேலுமணி மீது தொடர்ந்த அவதூறு பரப்பும் வகையில் திட்டமிட்டு பொய்க் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வந்த நிலையில் இன்றைய சோதனைகள் கண்டிக்கத்தக்கவை என்று கருதுகிறோம். கழகத்தின் முன்னாள் அமைச்சர்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் சட்ட ரீதியாக அரசியல் ரீதியாகவும் சந்திக்க கழகம் எப்போதும் தயாராகவே உள்ளது. ஆனால், ஆதாரம் ஏதுமின்றி உண்மை என்ன என்பதை கண்டுபிடிக்கும் முன்னரே ஊழல் பழி சுமத்துவது நியாயமற்றது . இத்தகைய சோதனைகள் அனைத்தையும் தாங்கி நின்று அதிமுக மக்கள் பணியில் தொடர்ந்து ஈடுபடும் அன்பு வழியிலும், அறவழியிலும் அரசியல் தொண்டாற்றும் என்று குறிப்பிட்டுள்ளது.