கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் நகராட்சிக்குட்பட்ட மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு 3 நாள்கள் பயிற்சி முகாம் நடை பெற்ற நிலையில் அதன் நிறைவு விழா புதன்கிழமை நடைபெற்றது.
மகளிர் திட்டத்தின் திருவாரூர் மாவட்ட திட்ட இயக்குனர் ஸ்ரீலேகா தமிழ்வாணன் உத்தரவின்படி, உதவி திட்ட அலுவலர் எம்.சரவணன் ஆலோசனையின் பேரில், தமிழ்நாடு நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில், மகளிர் சுய உதவிக் குழு ஊக்குனர் மற்றும் பிரதிநிதிகளுக்கான பயிற்சி முகாம் மூன்று நாட்களாக நடைபெற்றது.
கூத்தாநல்லூர் நகராட்சி கட்டட வளாகத்தில், தமிழ்நாடு நகர்புற வாழ்வாதார இயக்க சமுதாய அமைப்பாளர் எஸ்.தீபா பயிற்சியை நடத்தினார். கூத்தாநல்லூர் நகராட்சிக்குட்பட்ட கோரையாறு, நாகங்குடி, மேல் கொன்டாழி, மேலப்பனங்காட்டாங்குடி மற்றும் மரக்கடை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து, 8 குழுக்களைச் சேர்ந்த ஊக்குனர் மற்றும் பிரதிநிதிகள் என 16 பேர் பங்கேற்றனர்.
பயிற்சி முகாமில், சுய உதவிக் குழுவைத் தொடங்குவது, குழுவின் செயல்பாடுகள், குழுவின் பணம் வசூல் செய்வதன் முறைகள், வங்கியில் பணம் கட்டுவது உள்ளிட்ட குழுவின் முழு செயல் பாடுகள் குறித்து அமைப்பாளர் தீபா எழுத்து மூலமாகவும் விளக்கினார். பயிற்சி முகாமின் நிறைவு விழாவில், ஆணையர் ஆர்.லதா, பொறியாளர் ராஜகோபால், சுகாதார ஆய்வாளர் கி.அருண்குமார் உள்ளிட்டோர் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.