கரோனா பேரிடரிலிருந்து மீண்டு வரும் புதுச்சேரி
புதுச்சேரி: கரோனா பேரிடலிருந்து புதுச்சேரி மீண்டு வருகிறது. இங்கு கடந்த 24 மணி நேரத்தில் புதிய கரோனா பாதிப்பு 42 ஆகக் குறைந்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை புதிய கரோனா பாதிப்பு 60 ஆக இருந்த நிலையில், இன்று அது 42 ஆகக் குறைந்துள்ளதாக சுகாதாரத் துறை இயக்குநர் ஜி. ஸ்ரீராமுலு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று ஒரே நாளில் 3 ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், புதுச்சேரியில் 25 பேருக்கும், மாஹேவில் 12 பேருக்கும், காரைக்காலில் 4 பேருக்கும், ஏனாமில் ஒருவருக்கும் கரோனா உறுதியாகியுள்ளது. அதே வேளையில் கரோனாவுக்கு யாரும் பலியாகவில்லை.
இதன் மூலம் புதுச்சேரியில் ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு 1,22,934 ஆக உயர்ந்துள்ளது. தற்போது புதுச்சேரியில் கரோனா பாதிப்பு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 796 ஆக உள்ளது. இவர்களில் 631 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
நேற்று ஒரே நாளில் 93 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். இதையடுத்து இதுவரை கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,20,330 ஆக உள்ளது.