கம்பம்: தேனி மாவட்டத்தில் உள்ள சுருளி அருவியில் தொடர் மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
தேனி மாவட்டத்தில் தென்மேற்குத் தொடர்ச்சி மலையில் சுருளி அருவி அமைந்துள்ளது. தொடர் மழை காரணமாக நீர்வரத்துப் பகுதிகளான அரிசிப்பாறை, ஈத்தைப்பாறை நீர்ப்பிடிப்பு காட்டு ஓடைகளில் நீர் வரத்து அதிகரித்திருப்பதால் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
கரோனா தொற்று பரவல் காரணமாக சுருளி அருவி பகுதியில் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் கடந்த 2 ஆண்டுகளாக செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், அருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கை ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக ஊழியர்கள் கண்காணித்து வருகின்றனர்.
இதுகுறித்து புலிகள் காப்பக அலுவலர் ஒருவர் கூறும்போது, சுருளி அருவியில் தொடர் மழை காரணமாக கடந்த 3 நாட்களாக வெள்ளப்பெருக்கு அதிகரித்து வருகிறது.
சுருளியாறு செல்லும் பகுதிகளிலும் காட்டு ஓடைகளில் வரும் தண்ணீரும் சேர்ந்து அதிகமாக நீர் வரத்து ஏற்பட்டு முல்லைப் பெரியாற்றில் கலக்கிறது என்று தெரிவித்தார்