ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ளது பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்துக்காகத் திறந்துவிடப்படும் நீரை ஜனவரி 15ஆம் தேதி வரை நீட்டிக்க அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது குறித்து தமிழக அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா விடுத்துள்ள அறிக்கையில்,
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி திட்டப் பிரதானக் கால்வாய் இரட்டைப்படை மதகுகள் மற்றும் சென்னசமுத்திரம் பகிர்மானக் கால்வாய் ஒற்றைப்படை மதகுகளின் முதல்போக நன்செய் பாசனத்திற்கு 15.08.2021 முதல் 12.12.2021 வரை தண்ணீர் திறந்துவிட ஏற்கெனவே ஆணையிடப்பட்டு அதன்படி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
தற்பொழுது பவானிசாகர் அணையிலிருந்து முதல் போக பாசனத்திற்கு 12.12.2021-க்கு பிறகு நீட்டிப்பு செய்து தண்ணீர் திறந்து விடக் கோரிய கீழ்பவானி முறைநீர்ப்பாசன விவசாயிகள் கூட்டமைப்பின் கோரிக்கையை ஏற்று, பவானி சாகர் அணையிலிருந்து கீழ்பவானி திட்டப் பிரதானக் கால்வாய் இரட்டைப்படை மதகுகள் மற்றும் சென்னசமுத்திரம் பகிர்மானக் கால்வாய் ஒற்றைப்படை மதகுகளின் முதல்போக நன்செய் பாசனத்திற்கு 13.12.2021 முதல் 15.01.2022 முடிய மேலும் 34 நாட்களுக்கு கால நீட்டிப்பு செய்து தண்ணீர் திறந்து விட ஆணையிடப்படுகிறது.
இதனால் ஈரோடு, திருப்பூர், மற்றும் கரூர் மாவட்டங்களிலுள்ள 1,03,500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.