திருச்சி: அமாவாசை, பெளர்ணமி தொடங்கியதிலிருந்து 11ஆவது நாள் ஏகாதசி எனப்படுகிறது. அவை சுக்லபட்ச ஏகாதசி, கிருஷ்ணபட்ச ஏகாதசி எனவும் அழைக்கப்படுகின்றன.
ஓர் ஆண்டுக்கு 24 அல்லது 25 ஏகாதசிகள் வரும். இதில், மார்கழி மாதத்தில் வரும் வைகுந்த ஏகாதசியில் விரதம் மேற்கொள்வது சிறப்பான பலன்களைத் தரும். மூன்று கோடி ஏகாதசிகளில் விரதம் இருந்த பலனைத் தரக்கூடியது என்பதால் வைகுந்த ஏகாதசி முக்கோடி ஏகாதசி எனவும் அழைக்கப்படுகிறது.
ஏகாதசி அன்று தன்னை வழிபடுவோர்க்கு வைகுந்த பதவி அளிப்பதாக கூறி நம்பெருமாள் அருளியதாக ஐதீகங்கள் கூறுகின்றன. அந்த தினமே வைகுந்த ஏகாதசியாக பெருமாள் ஆலயங்களில் கொண்டாடப்படுகிறது.
மேலும் படிக்க.. நிலவில் மர்ம வீடு!
விஜயநகர பேரரசு காலத்தில் மார்கழி மாத கடைசியில் வைகுந்த ஏகாதசியும், தை முதல் பகுதியில் தை திருநாளும் வந்தது. இதை எப்படி கொண்டாடுவது என கேள்வி எழுந்தபோது, அப்போது மணவாள மாமுனிகள் சொன்னபடி வைகுந்த ஏகாதசி திருவிழா கார்த்திகை மாதம் நடைபெற்றது.
அதேபோல 19 ஆண்டுகளுக்கு ஒருமுறை கார்த்திகையில் வைகுந்த ஏகாதசி விழா நடைபெறுகிறது. இதன்படி, இந்தாண்டு கார்த்திகையில் விழா நடைபெறுகிறது.