அரியலூர்: அரியலூர் நகராட்சியில் பணிபுரிந்து வரும் தூய்மைப் பணியாளர்கள், தங்களுக்கு ஊதியம் கேட்டு நகராட்சி அலுவலத்தை 3 ஆவது நாளாக புதன்கிழமையும் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரியலூர் நகராட்சி பொது சுகாதாரப் பணியில் நிரந்தரம் மற்றும் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் 150-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர். இதில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மாவட்ட ஆட்சியரால் நிர்ணயிக்கப்பட்ட தினக் கூலி ரூ.292. இதில் பிடித்தம் போக தலா ஒரு நபருக்கு தினக் கூலி அடிப்படையில் ரூ.260 வீதம் மாத ஊதியம் 90 பேருக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நகராட்சி நிர்வாகம் கடந்த சில மாதங்களாக ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களுக்கு மாத ஊதியம் சரிவர வழங்கப்படுவதில்லை. கடந்த மாதம் கூட துப்புரவு தொழிலாளர்கள் போராட்டத்துக்கு பிறகு தான் ஊதியம் வழங்கப்பட்டது.
அதே போல் இம்மாதமும், தூய்மைப் பணியாளர்களுக்கு இது நாள் வரை ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால் அன்றாட அத்தியாவசியப் பொருள்கள் கூட வாங்க முடியாமல் அவதிப்பட்டு வரும் தூய்மைப் பணியாளர்கள் தங்களுக்கு ஊதியம் கேட்டு 3 ஆவது நாளாக புதன்கிழமையும் பணிகளை புறக்கணித்து நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தில் ஏஐடியுசி பொதுச் செயலர் டி.தண்டபாணியும் கலந்து கொண்டார்.