
காரைக்காலில் காவிரி நதி திருவிழா, அரசலாற்றில் ஆரத்தி வழிபாட்டில் கலந்துகொண்ட தருமபுர ஆதீனம் குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள்.
காரைக்கால் : காரைக்காலில் காவிரி நதி நீர் திருவிழா, அரசலாற்றில் ஆரத்தி வழிபாடு, கலை நிகழ்ச்சிகளுடன் சனிக்கிழமை நடத்தப்பட்டது.
மத்திய ஜல்சக்தி அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி, நாட்டின் 75-ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, நதிகளை வளப்படுத்துதல், நதி செல்லும் பகுதியை தூய்மையை பராமரிக்கும் நோக்கமாக காவிரி நதி திருவிழா காரைக்காலில் சனிக்கிழமை நடத்தப்பட்டது.
காரைக்கால் மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை உள்ளிட்ட பிற அரசுத்துறைகள் சார்பில் திருநள்ளாறு அருகே அகலங்கண்ணு கிராமத்தில் அரசலாற்றங்கரையில் இத்திருவிழா நடத்தப்பட்டது.
முன்னதாக ஆற்றங்கரை அருகே புனிதநீர் கடம் வைத்து சிறப்பு ஹோமம் சிவாச்சாரியர்களால் நடத்தப்பட்டது. ஹோம நிறைவில் பூர்ணாஹூதி செய்யப்பட்டு புனிதநீர் கடம், சிறப்பு நாகசுர மேள வாத்தியங்களுடன் புறப்பாடு செய்யப்பட்டது.
இதையும் படிக்க | புதுமைகளின் திருத்தலம் வேளாங்கண்ணி
சிறப்பு அழைப்பாளராக தருமபுர ஆதீனம் குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கலந்துகொண்டார். புதுவை சட்டப்பேரவைத் தலைவர் ஏம்பலம் செல்வம், போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திர பிரியங்கா, நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் வெ.வைத்திலிங்கம், சட்டப்பேரவை உறுப்பினர் பி.ஆர்.சிவா, மாவட்ட ஆட்சியர் (பொ) எம்.ஆதர்ஷ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
ஆற்றில் புனிதநீரை ஊற்றி சிறப்பு ஆரத்தி பூஜைகள் நடைபெற்றன. இந்நிகழ்வைத் தொடர்ந்து ஆற்றங்கரையில் மரக்கன்றுகள் நடப்பட்டன. பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளும் காரைக்காலை சேர்ந்த பல்வேறு குழுக்களால் நடத்தப்பட்டன.
நீர்நிலைகளை பாதுகாக்கவேண்டும், நீர்நிலையோரத்தில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கவேண்டும், நீர்நிலைப் பகுதியை தூய்மையானதாக வைத்திருக்கவேண்டும் என்று திருவிழாவின் மூலம் மக்களுக்கு அரசுத்துறையினர் அறிவுறுத்தினர்.
இதையும் படிக்க | பிணி தீர்க்கும் அற்புத குழந்தை இயேசு திருத்தலம்!