சென்னை: 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக ஆளுநரிடமிருந்து இதுவரை எந்த பதிலும் இல்லை என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
பேரறிவாளன் உள்பட 7 பேரையும் விடுவிப்பது தொடர்பான விவகாரத்தில் திமுக தவறான தகவல்களை பரப்பி வருவதாகவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது, 7 பேர் விடுதலை தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பேசினார்.
இதையும் படிக்கலாமே.. 60 ஆகிறது தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது: விரைவில் அறிவிப்பு
அதற்கு பதிலளித்த தமிழக முதல்வர் பழனிசாமி, பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை தொடர்பாக திமக தவறான தகவல்களை பரப்பி வருகிறது.
7 பேர் விடுதலை தொடர்பாக ஏற்கனவே சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது அதிமுக அரசுதான். ஏழு பேர் விடுதலை தொடர்பான தீர்மானத்தை பேரவையிலும் அமைச்சரவையிலும் கொண்டு வந்தது அதிமுக அரசு.
ஆனால் திமுக ஆட்சியின் போது, நளினிக்கு மட்டும் கருணை மனுவை ஏற்று ஆயுள் தண்டனையாக குறைக்கலாம் எனவும் மற்றவர்களின் கருணை மனுக்களை நிராகரிக்கலாம் என்றுதான் திமுக ஆட்சியில் அமைச்சரவை விவாதித்து முடிவெடுத்தது என்று முதல்வர் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக ஆளுநரிடமிருந்து இதுவரை எந்த பதிலும் இல்லை. ஆனால், இந்த விவகாரத்தில் ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.