அரசுப் பணியாளர்கள் ஓய்வு பெறும் வயது 59-இல் இருந்து 60 ஆக உயர்த்தப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் முதல்வர் வெளியிட்ட அறிவிப்பில், தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள், பணியிலிருந்து ஓய்வு பெறும் வயது, 58-லிருந்து 59 ஆக உயர்த்தி கடந்த ஆண்டு மே மாதம் எனது உத்தரவின் பேரில், அரசாணை வெளியிடப்பட்டது. அரசு பணியாளர்களின் ஓய்வு பெறும் வயது தற்போது அமலில் உள்ள 59 வயது என்பது, 60 வயதாக உயர்த்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் இப்பேரவைக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதையும் படிக்கலாமே.. 9, 10, 11-ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வின்றி தேர்ச்சி: பழனிசாமி அறிவிப்பு
இந்த உத்தரவு, அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், அரசியலமைப்பு மற்றும் சட்ட ரீதியான அமைப்புகள், அரசு நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், வாரியங்கள், ஆணையங்கள், சங்கங்கள் உள்ளிட்ட அனைத்து பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கும் பொருந்தும்.
இந்த உத்தரவு, தற்போது அரசுப் பணியில் இருக்கும் அனைவருக்கும் மற்றும் இந்த ஆண்டு, அதாவது 31.5.2021 அன்று பணியில் இருந்து ஓய்வு பெறும் பணியாளர்களுக்கும் பொருந்தும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.
தற்போது தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 59 ஆக இருக்கும் நிலையில், இதனை 60 ஆக உயர்த்தி தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
2021 மே மாதம் 31-ஆம் தேதிக்குள் ஓய்வு பெறும் அரசு ஊழியர்கள் அனைவருக்கும் இந்த ஓய்வுபெறும் வயது வரம்பு பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.