ரஜினி அரசியலுக்கு வர வலியுறுத்தி சென்னையில் ரசிகர்கள் அறவழியில் போராட்டம்

நடிகர் ரஜினிகாந்த்  திடீரென்று உடல்நிலையை காரணமாகக் கூறி அரசியலில் ஈடுபடபோவதில்லை என்று அறிவித்திருந்த நிலையில், அவரது ரசிகர்கள் அரசியலுக்கு வர வலியுறுத்தி,
அறவழி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள ரஜினி ரசிகர்கள்.
அறவழி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள ரஜினி ரசிகர்கள்.
Updated on
2 min read

சென்னை: நடிகர் ரஜினிகாந்த்  திடீரென்று உடல்நிலையை காரணமாகக் கூறி அரசியலில் ஈடுபடபோவதில்லை என்று அறிவித்திருந்த நிலையில், அவரது ரசிகர்கள் அரசியலுக்கு வர வலியுறுத்தி, சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே ரசிகர்கள் சார்பில் அறவழி ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதில் நூற்றுக் கணக்கானோர் பங்கேற்றுள்ளனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தொடர்ந்து ரசிகர்கள் வந்த வண்ணம் உள்ளனர்

நடிகா் ரஜினிகாந்த் அரசியல் கட்சியை தொடங்கயிருந்தது, அவரது ரசிகா்களுக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு டிசம்பா் 31 ஆம் தேதி ரஜினிகாந்த் புதிய கட்சியின் பெயரை அறிவிக்கப் போவதாகக் கூறியிருந்தாா்.

இந்நிலையில் திடீரென்று உடல்நிலையை காரணமாகக் கூறி அரசியலில் ஈடுபடபோவதில்லை என ரஜினி அறிவித்தாா். தமிழகம் முழுவதும் உள்ள ரஜினி ரசிகா்களுக்கு இந்த அறிவிப்பு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

இதனால் மனமுடைந்த ரஜினி ரசிகா்களில் ஒரு தரப்பினா் சென்னை வள்ளுவா் கோட்டத்தில் ரஜினி அரசியலுக்கு வர வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்துவதற்கு காவல்துறையின் அனுமதியை பெற்றுள்ளனா்.

இந்த போராட்டத்தில் பங்கேற்பதற்காக, தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து வாகனங்களில் ரஜினி ரசிகா்கள் சனிக்கிழமை சென்னைக்கு புறப்பட்டு வந்துள்ளனர். இதேபோல ரஜினி ரசிகா்கள் அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் மூலமும் சென்னை வந்துள்ளனர்.

ரஜினி உடல்நலம் சீராக வேண்டி மொட்டை போட்ட ரசிகர்கள்.

இந்நிலையில், சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே ரசிகர்கள் சார்பில் ஞாயிற்றுக்கிழமை அறவழி ஆர்ப்பாட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்டுள்ள ரஜினி மக்கள் மன்றத்தில் கீழ்மட்ட பொறுப்பாளர்கள் மற்றும் ரசிகர்கள், ரஜினிகாந்த் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி வருகின்றனர். 

"அரசியலுக்கு வாங்க ரஜினி" என்ற வார்த்தை சுட்டுரையில் டிரெண்டிங் ஆகி வருகிறது. 

ரஜினியை அரசியலுக்கு வர வலியுறுத்தி யாரும் போராட்டம் போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று ரஜினி மக்கள் மன்ற தலைமை கேட்டுக்கொண்டிருந்தாலும், ரசிகர்கள் அதனை பொருட்படுத்தாமல் திட்டமிட்டபடி அறவழி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தொடர்ந்து ரசிகர்கள் வந்த வண்ணம் உள்ளனர்

ரசிகர்களின் அறவழி ஆர்ப்பாட்டத்தை அடுத்து ரஜினிகாந்த் ஏதேனும் அறிக்கை விடுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com