ஒலிம்பிக் போட்டிக்கு மதுரையைச் சேர்ந்த வீராங்கனை தேர்வு
மதுரை: ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு 400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டப் போட்டிக்கு மதுரையைச் சேர்ந்த வீராங்கனை தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மதுரை சக்கி மங்கலத்தைச் சேர்ந்தவர் ரேவதி 28. சிறுவயதிலேயே தாய், தந்தையை இழந்த ரேவதி மற்றும் அவரது தங்கை, பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்துள்ளனர். மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ள ரேவதி, மதுரையைச் சேர்ந்த தடகளப் பயிற்சியாளர் கண்ணன் அளித்த ஆதரவு மற்றும் தீவிரப் பயிற்சியின் விளைவால் தேசிய, சர்வதேசப் போட்டிகளில் பதக்கங்கள் பெற்றுள்ளார்.
இந்நிலையில் ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் 400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டப் போட்டிக்கு ரேவதி தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்போது பட்டியாலா நகரில் நடைபெற்று வரும் பயிற்சி முகாமில் ரேவதி தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். குடும்ப வறுமையின் காரணமாக ரேவதி மைதானத்தில் வெறும் காலோடு ஓடி பயிற்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ரேவதி ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று இருப்பதால் சக்கிமங்கலம் பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.