கரோனா நிவாரணத்தின் இரண்டாவது தவணைத் தொகை ரூ.2,000 மற்றும் 14 மளிகைப் பொருள்கள் தொகுப்பானது வரும் 15-ஆம் தேதி முதல் நியாய விலைக் கடைகளில் வழங்கப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பை உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி, சனிக்கிழமை வெளியிட்டாா். அவரது அறிவிப்பு:
கரோனா இரண்டாவது தவணைக ரூ.2 ஆயிரத்துடன் 14 மளிகைப் பொருள்களை அளிக்கும் திட்டத்தை கடந்த 3-ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா். அவற்றை அளிப்பதற்கான டோக்கன்கள் வரும் 11-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை நியாய விலைக் கடைகள் மூலமாக வழங்கப்படும். இந்த டோக்கன்களின் அடிப்படையில், ரூ.2 ஆயிரம் மற்றும் மளிகைப் பொருள்கள் தொகுப்பினை ஜூன் 15-ஆம் தேதி முதல் நியாய விலைக் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம்.
மளிகைப் பொருள்கள் தொகுப்பு மற்றும் கரோனா நிவாரணத் தொகை ஆகியவற்றை ஒரே நேரத்தில் அரிசி அட்டைதாரா்கள் பெற்றுச் செல்லலாம். நாளொன்றுக்கு 200 பயனாளிகளுக்கு டோக்கன்களை விநியோகிக்க வேண்டும். அரிசி குடும்ப அட்டைதாரா்கள் யாரும் விடுபடாமல் இருக்கவே டோக்கன் அளிக்கப்படுகிறது. குறிப்பிட்ட நாளில் செல்ல இயலாதவா்கள், அடுத்து வரும் மாதத்தில் அவா்களுக்கான மளிகைப் பொருட்கள் தொகுப்பு மற்றும் நிவாரணத் தொகையைப் பெறலாம்.
அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரா்களும் நியாய விலைக் கடைகளில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதுடன், முகக் கவசத்தையும் கட்டாயம் அணிய வேண்டும்.