நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் தொடர்ந்து நீடித்து வரும் கனமழையால் மாவட்டத்தின் பல பகுதிகளில் குடியிருப்புகள் மழை நீரால் சூழப்பட்டன.
காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, நாகை மாவட்டத்தில் கடந்த வியாழக்கிழமை இரவு முதல் பலத்த மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது. நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பகல் நேரத்தில் சற்றுக் குறைந்திருந்த மழை சீற்றம், மாலையிலிருந்து மீண்டும் அதிகரித்தது. மாலை 6 மணியிலிருந்து இரவு முழுவதும் பலத்த மழை பெய்தது.
இதையும் படிக்க | போலீஸாருக்கு வாரத்தில் ஒருநாள் ஓய்வு: முதல்வர் உத்தரவு
புதன்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிக அளவாக நாகையில் 128.6 மி.மீட்டர் (12.8 செ.மீ) மழை பதிவானது. திருப்பூண்டியில் 84.4 மி.மீட்டரும், தலைஞாயிறில் 70.8 மி.மீட்டரும், வேதாரண்யத்தில் 49.6 மி.மீட்டரும் மழை பதிவானது.
கனமழையால் கடலைப் போல காட்சியளித்த நாகை புதிய கடற்கரை
நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் புதன்கிழமை காலை 8 மணி வரை பலத்த மழை நீடித்தது. அதன் பின்னர் மழை சீற்றம் சற்றுக் குறைந்திருந்தது. நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் புதன்கிழமை காலை 10 மணி முதல் லேசான சாரல் மழை தொடர்ந்தது.
இதையும் படிக்க | மத்திய அரசு நிறுவனத்தில் கொடக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்
நீடித்து வரும் கனமழை காரணமாக, நாகை வ.உ.சி தெரு, நாகூர் எம்.ஜி.ஆர் நகர் உள்பட நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் தாழ்வான பகுதிகளைச் சேர்ந்த குடியிருப்புகள் புதன்கிழமை மழை நீரால் சூழப்பட்டன. இதனால், அந்தப் பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது.
நீடித்து வரும் மழையின் காரணமாக, தீபாவளி பண்டிகை வர்த்தகத்தில் பெரும் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. தரைக்கடை வியாபாரிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் மழை குறுக்கீடால் பெரும் அவதிக்குள்ளாகினர்.