திருவள்ளூர்: புழல் ஏரியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு 500 கனஅடி வீதம் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூா் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் ஏரிகளுக்கு நீா் வரத்து அதிகரித்துள்ளது. அதில், சென்னைக்கு குடிநீா் வழங்கும் முக்கிய நீா் நிலைகளில் ஒன்றான பூண்டி ஏரி 90 சதவிகிதத்திற்கு மேல் நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கிறது.
இன்றைய நிலவரப்படி நீர் இருப்பு 19.30 அடியாகவும், கொள்ளளவு 2,872 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. புழல் ஏரியின் நீர் வரத்து காலை 6 மணி நிலவரப்படி, 1,487 கன அடியாக உள்ளது. தற்போது பருவ மழையினால் நீர் வரத்து தொடர்ச்சியாக உயர்வதால் புழல் ஏரியின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. ஏரியின் நீர் மட்டம் 19.30 அடியாக உள்ளது.
இதையும் படிக்க | சென்னையில் மேலும் 3 மணி நேரம் கனமழை நீடிக்கும்!
இதையடுத்து புழல் ஏரிக்கு வரும் மழைநீர் தொடர்ந்து அதிகரித்து வருவதால் புழல் ஏரியில் ஞாயிற்றுக்கிழமை காலை 500 கன அடி உபரிநீர் திறக்கப்படும். மழைநீர் வருகையை பொறுத்து ஏரியில் உபரிநீர் திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்படும் என்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சாமியார்மடம், வடகரை, வடபெரும்பாக்கம், மணலி உள்ளிட்ட கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.