தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் நேரடியாகதான் தேர்வு நடைபெறும் என உயர்கல்வித்துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
கரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக மூடப்பட்ட கல்லூரிகள் கடந்த செப்டம்பர் மாதம் முதல் மீண்டும் திறக்கப்பட்டது.
இந்நிலையில், பருவத் தேர்வுகளை நேரடியாக நடத்தக்கூடாது என மதுரை ஆட்சியர் அலுவலகத்திற்கு வெளியே மாணவர்கள் நேற்று போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து அனைத்து பல்கலைக்கழகத்திற்கு உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்ட சுற்றறிக்கையில்,
மாநிலத்தில் கரோனா நோய்ப் பரவல் படிப்படியாக குறைந்து வருகின்றது. ஆகையால், தமிழக உயர்கல்வித்துறையின் கீழ் செயல்படும் அனைத்து கல்லூரிகளுக்கும் பருவத் தேர்வுகள் நேரடியாக மட்டுமே நடைபெறும்.
கரோனா விதிமுறைகளை பின்பற்றி பொறியியல், அறிவியல், பாலிடெக்னிக் என தமிழக அரசின் கீழ் இயங்கும் அனைத்து கல்லூரிகளுக்கும் இது பொருந்தும் எனத் தெரிவித்துள்ளார்.