திருப்பூர்: பின்னலாடை உற்பத்திக்கு தேவையான நூல் விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் குமரன் சிலை முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் எஸ் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார்.
இதில் பங்கேற்றவர்கள் கூறியதாவது: பின்னலாடை மற்றும் விசைத்தறி உற்பத்திக்கு தேவையான நூல் விலையானது கடந்த சில மாதங்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக கடந்த நவம்பர் 1 ஆம் தேதி மட்டும் ஒரு கிலோவுக்கு ரூ.50 வரையில் அதிகரித்தது. இதனால் பின்னலாடை உற்பத்தி மற்றும் ஜவுளித் தொழிலில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நூல் விலை உயர்வுக்கு மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையே காரணமாகும். ஆகவே நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ரவி, மாவட்ட பொருளாளர் பி. ஆர். நடராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.