முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்கும் நீதியரசர் ஆறுமுகசாமி ஆணையம் தொடர்ந்து செயல்படும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தடை கோரி அப்போலோ மருத்துவமனை தொடர்ந்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ். அப்துல் நஸீர், கிருஷ்ண முராரி ஆகியோர் அடங்கிய அமர்வில் தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்று விசாரணை தொடர்ந்தது.
அப்போது நீதிபதிகள், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள சந்தேகம் குறித்து விசாரிக்கும் நீதியரசர் ஆறுமுகசாமி ஆணையம் தொடர்ந்து செயல்படும் என்று கூறி அப்போலோவின் கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டனர்.
அதுமட்டுமின்றி, உணவுக்கூடத்தின் அளவுகூட இல்லாத இடத்தில் ஆணையம் செயல்பட்டு வருகிறதா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியதுடன். வருகிற 30 ஆம் தேதிக்குள் ஆணையம் செயல்பட மாற்று இடம் வழங்கவும் உத்தரவிட்டனர்.
மேலும், ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவ கூடுதலாக எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் நியமிக்கப்படுவர். விசாரணை குறித்து செய்தி சேகரிக்க அனைத்து செய்தியாளர்களையும் அனுமதிக்க வேண்டும் என்றும் கூறி வழக்கை நவ-30-க்கு ஒத்திவைத்தனர்.