ஈரோடு: ஈரோட்டில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக அதிமுகவினர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்தனர்.
தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்கள் இன்று தொடங்கி வருகிற 29 ம் தேதி வரை அந்தந்த மாவட்டக் கழக அலுவலகங்களில் பெற்று பூர்த்தி செய்து தாக்கல் செய்யலாம் என அதிமுக தலைமை அறிவித்தது.
அதனடிப்படையில் ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு முன்னாள் அமைச்சரும், ஈரோடு மாநகர் மாவட்ட கழக செயலாளருமான கே.வி.ராமலிங்கம் தலைமை தாங்கினார்.
முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் தென்னரசு முன்னிலை வகித்தார். இதில் ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்களுக்கான தொகைகளை செலுத்தி மனுக்களைப் பெற்று, பூர்த்தி செய்து மனுவை தாக்கல் செய்து வருகின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் துணை மேயர் கே.சி.பழனிசாமி, பகுதி செயலாளர்கள் இரா.மனோகரன், கேசவமூர்த்தி, ஜெகதீஸ் உள்பட பல நிர்வாகிகள் கலந்துகொண்டு மனுக்களை வாங்கினர்.