தேனி: தேவதானப்பட்டி அருகே கெங்குவார்பட்டி பேரூராட்சியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைப்பதற்கு எம்எல்ஏ சரவணக்குமார் வருவதற்கு தாமதமானதால், சுமார் ஒன்றரை மணி நேரம் ஆட்சியர் உள்பட அதிகாரிகள் ரோட்டில் காத்திருந்தனர்.
தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகேயுள்ள கெங்குவார்பட்டி பேரூராட்சியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் வெள்ளிக்கிழமை காலை 10:15 மணி அளவில் மாவட்ட நிர்வாகம் சார்பில் சட்டப்பேரவை உறுப்பினர் முன்னிலையில் திறக்கப்பட இருந்தது. காலை 9:45 மணிக்கே மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளீதரன் உள்பட மாவட்ட அதிகாரிகள், திமுக பிரமுகர்கள் திரண்டிருந்தனர்.
அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைப்பதற்கு எம்எல்ஏ சரவணக்குமார் வருவதற்கு தாமதமானதால், சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக சாலையில் காத்திருந்த ஆட்சியர், அதிகாரிகள் மற்றும் திமுகவினர்.
இந்நிலையில், பெரியகுளம் சட்டப்பேரவை தொகுதி எம்எல்ஏ சரவணக்குமார் வருவதற்கு தாமதமானதால் சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக மாவட்ட ஆட்சியர் உள்பட மாவட்ட அதிகாரிகள் பலர் சாலையில் காத்திருந்தனர்.
காத்திருந்த வேளையில் அரசு பேருந்து, தனியார் பேருந்து மற்றும் இரு சக்கர வாகனங்களில் முகக் கவசம் அணியாமல் சென்ற நபர்களுக்கு அபராதம் விதித்தும், முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்தும் அறிவுறுத்தினார்.
கெங்குவார்பட்டி பேரூராட்சியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைப்பதற்கு எம்எல்ஏ சரவணக்குமார் வருவதற்கு தாமதமானதால், சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக சாலையில் காத்திருந்த விவசாயிகள்.
பின்னர் காலை 11 மணியளவில் தேனி வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வனுடன் வருகை தந்த பெரியகுளம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் சரவணக்குமார் முன்னிலையில் அரசு நேரடி கொள்முதல் நிலையம் திறந்து வைக்கப்பட்டது.
அதிகாரிகள் அனைவரும் நின்றுகொண்டிருப்பதைப் பார்த்து இந்த வழியில் செல்வோர் விசாரிக்க, விசாரிக்க சட்டப்பேரவை உறுப்பினர் வந்துசேர தாமதமான தகவல் பரவிக்கொண்டிருந்தது.