ராம்குமார் மின்சாரம் பாய்ந்து சாகவில்லை: சுவாதி கொலையில் அவிழாத முடிச்சு

மென்பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமாரின் உடல் திசுக்களில் நடத்தப்பட்ட பரிசோதனையின் மூலம், அவர் மின்சாரம் பாய்ந்து பலியானார் என்பதை மெய்ப்பிக்கும் ஆதாரம் கிடைக்கவில்லை.
ராம்குமார் மின்சாரம் பாய்ந்து சாகவில்லை: சுவாதி கொலையில் அவிழாத முடிச்சு
ராம்குமார் மின்சாரம் பாய்ந்து சாகவில்லை: சுவாதி கொலையில் அவிழாத முடிச்சு

மென்பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமாரின் உடல் திசுக்களில் நடத்தப்பட்ட பரிசோதனையின் மூலம், அவர் மின்சாரம் பாய்ந்து பலியானார் என்பதை மெய்ப்பிக்கும் ஆதாரம் கிடைக்கவில்லை.

மெய்ம்மி நோயியியல் (ஹிஸ்தோபாதாலஜி) நிபுணர்கள், மாநில மனித உரிமை ஆணையத்தின் முன் ஆகஸ்ட் 18ஆம் தேதி தாக்கல் செய்த அறிக்கையில் இந்த தகவல் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை, சுவாதி கொலை வழக்கில் ராம்குமாருக்காக ஆஜரான வழக்குரைஞர் பி. ராம்ராஜ் வெளியிட்டுள்ளார்.

இந்த அறிக்கையின் உண்மைத் தன்மை குறித்து மாநில மனித உரிமைகள் ஆணைய அதிகாரிகள் இதுவரை உறுதிசெய்யவோ, மறுக்கவோ இல்லை.

மென்பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் (24) கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் புழல் சிறையில் மின்சார கம்பியைக் கடித்து தற்கொலை செய்துகொண்டார் என்பதுதான் காவல்துறையினர் அளித்த விளக்கம்.

ஆனால், மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் முன் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் அறிக்கையில், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அப்போது பேராசிரியர்களாக இருந்த மருத்துவர்கள் டாக்டர். ஆண்டாள் பழனி மற்றும் டாக்டர் வேணு ஆனந்த், 2016ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி ராம்குமாரின் உடலை ஆய்வு செய்த போது, அவரது மூளை மற்றும் இதய திசுக்கள் நல்ல நிலையில் இருந்ததைக் கண்டறிந்ததாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், நுரையீரல்கள், கல்லீரல், நாக்கு, உதடுகள், மண்ணீரல், சிறுநீரகங்கள் ஆகியவையும் கூட நல்ல நிலையில் இருந்ததாக சான்றளித்துள்ளனர்.

மின்சாரம் தாக்கியவர்களின் உடலிலிருக்கும் திசுக்களில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்குமா? என்று மனுதாரர் தரப்பில் எழுப்பப்பட்டிருந்த கேள்விக்கு பதிலளித்த மருத்துவர்கள், பெரும்பாலும் மாற்றம் ஏற்பட்டிருக்கும், ஆனால், இதில் அப்படி ஏற்படவில்லை என்று தெளிவாக எடுத்துரைத்துள்ளனர்.

ராம்குமாரின் உடல் திசுக்களை ஆராய்ந்ததில் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததற்கான சாத்தியக் கூறுகள் தென்படவில்லை என்று தங்களது ஆய்வறிக்கையில் மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குறுக்கு விசாரணையில், 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 18ஆம் தேதி ராம்குமாரின் உடலை சிறையிலிருந்து கொண்டு வந்த போது பணியிலிருந்த ராயப்பேட்டை அரசு மருத்துவமனையின் அவசரசிகிச்சைப் பிரிவின் மருத்துவ அலுவலர் டாக்டர் சயீத் அப்துல் காதர் கூறுகையில், ராம்குமாரின் உடலை மருத்துவமனைக்குக் கொண்டு வரும் போது சிறை மருத்துவரும் உடன் வந்தார். ஆனால், சிறையில் நடந்த இந்த விபத்துக் குறித்து பதிவுகளின் நகலோ அல்லது சிறையில் ராம்குமாருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்கான ஆவணங்களோ சமர்ப்பிக்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.

"சிறையில் அவருக்கு எந்தவிதமான சிகிச்சை அளிக்கப்பட்டது என்பதற்கான எந்த ஆவணங்களும் என்னிடம் வழங்கப்படவில்லை. ராம்குமாருக்கு எந்தவிதமான சிகிச்சை அளிக்கப்பட்டது என்றும் எனக்குத் தெரியாது. நான் வழங்கிய விபத்து பதிவேட்டிலும், மின்சாரம் தாக்கியதால் ஏற்பட்ட காயங்கள் என்று எதையும் குறிப்பிடவில்லை" என்றார். "அதே வேளையில், ராம்குமாரின் உடலில் விறைப்புத் தன்மை இருந்ததாகவும், ஒருவர் இறந்து 12 மணி நேரத்துக்குப் பிறகே விறைப்புத் தன்மை ஏற்படும்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

"நான் பார்த்த ஒரு சில காயங்களும், மின்சாரம் தாக்கியதால் ஏற்பட்டவை அல்ல. இருந்தபோதும், உடல் உடற்கூராய்வுக்காக பிணவறைக்கு அனுப்பப்பட்டது, உடலை நான் அவ்வளவு தீவிரமாக ஆய்வு செய்யவில்லை. நான் முதலில் அளித்த தகவலில், தவறுதலாக மின்சாரம் தாக்கியதால் காயம் என்று குறிப்பிட்டுவிட்டேன்" என்று குறுக்கு விசாரணையில் பதிலளித்திருந்தார்.

ராம்குமார் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்று ஊடகங்களில் வெளியான செய்திகளைத் தொடர்ந்து, மாநில மனித உரிமைகள் ஆணையம் இந்த வழக்கை தாமாக முன் வந்து விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.

சுவாதி கொலை வழக்கின் பின்னணி என்ன?
சென்னை நுங்கம்பாக்கத்தில் சூளைமேட்டைச் சேர்ந்த தனியார் நிறுவன மென்பொறியாளர் சுவாதி ஜூன் 24-இல் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இதில் எந்தவித துப்பும் கிடைக்காத நிலையில், குற்றவாளியின் மேம்படுத்தப்பட்ட புகைப்படத்தை காவல்துறையினர் வெளியிட்டனர். இந்த நிலையில் சூளைமேட்டில் உள்ள விடுதியில் தங்கியிருந்த ராம்குமார் மீது சந்தேகம் உள்ளதாக விடுதியின் காவலர் தகவல் அளித்தார்.

ஜூலை 1-இல் கைது: விடுதியின் பதிவேட்டில் இருந்த விலாசத்தின்பேரில், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை அருகேயுள்ள மீனாட்சிபுரத்தில் உள்ள தனது வீட்டில் பதுங்கியிருந்த ராம்குமாரை ஜூலை 1-இல் போலீஸார் கைது செய்தனர். அப்போது தனது கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறி ராம்குமாரை விசாரணைக்குப் பிறகு சென்னை புழல் சிறையில் காவலர்கள் அடைத்தனர்.

அங்கு மன அழுத்தத்தில் இருந்து வந்ததால், மனநல ஆலோசனை தொடர்ந்து வழங்கப்பட்டு வந்தது.

மின்சார கம்பியை வாயில் செருகினார்: இந்த நிலையில் 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 18ஆம் தேதி பிற்பகல் 4.30 மணிக்கு ராம்குமார் வழக்கம்போல் சிறை வளாகத்தில் உலாவ அனுமதிக்கப்பட்டார். அப்போது சமையல் அறைக்கு அருகே உள்ள மின்சாரப் பெட்டியின் அருகே திடீரென சென்றுள்ளார். அங்கு இருந்த மின்கம்பிகளைத் துண்டித்து தனது வாய், மார்பு உள்பட உடலின் பல்வேறு பகுதிகளில் செருகிக் கொண்டாராம். உடலில் மின்சாரம் பாய்ந்ததால் ராம்குமார் தூக்கி வீசப்பட்டார். இதை பார்த்த கைதிகளும், சிறைக்காவலர்களும் அதிர்ச்சியடைந்தனர்.

நாடித் துடிப்பு குறைந்த நிலையில்...: மயங்கிக் கிடந்த ராம்குமாரை மீட்டு சிறையில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. நாடித்துடிப்பு மிகவும் குறைவாக இருந்ததால், அவர் பலத்த பாதுகாப்புடன் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு மாலை 5.45 மணிக்கு 108 ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் வழியிலேயே இறந்தார் என்று காவலர்கள் தெரிவித்தனர்.

உடனடியாக திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை அருகே மீனாட்சிபுரத்தில் உள்ள அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போராட்டம்: தகவலறிந்த வழக்குரைஞர்கள், ராம்குமாரின் உறவினர்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் திரண்டனர். பல்வேறு போராட்டங்கள் மற்றும் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு ராம்குமாரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இது தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்தியைக்  கொண்டு மாநில மனித உரிமைகள் ஆணையம், தாமாக முன் வந்து இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றது.

கைது முதல்... தற்கொலை வரை...

  • ஜூன் 24: நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மென்பொறியாளர் சுவாதி வெட்டிக் கொலை.
  • ஜூன் 27: கொலை வழக்கு விசாரணை ரயில்வே போலீஸாரிடமிருந்து சென்னை பெருநகரக் காவல் துறைக்கு மாற்றம்.
  • ஜூலை 1: செங்கோட்டையில் ராம்குமாரை கைது செய்ய முயன்றபோது, அவர் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சி.
  • ஜூலை 4: திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் இருந்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு ராம்குமார் கொண்டு வரப்பட்டார்.
  • ஜூலை 5: ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் இருந்து புழல் சிறைக்கு ராம்குமார் மாற்றம்.
  • ஜூலை 6: நீதிமன்றத்தில் ராம்குமார் ஜாமீன் மனு தள்ளுபடி.
  • ஜூலை 12: புழல் சிறையில் நீதித்துறை நடுவர் முன்னிலையில் அடையாள அணிவகுப்பு.
  • ஜூலை 28: ராம்குமாரை விடியோ, புகைப்படம் எடுக்க போலீஸாருக்கு எழும்பூர் நீதிமன்றம் அனுமதி.
  • ஆக.13: புழல் சிறையில் ராம்குமாரை போலீஸார் விடியோ, புகைப்படம் எடுத்தனர்.
  • ஆக.18: கையெழுத்துப் பரிசோதனைக்கு, கையெழுத்திட ராம்குமார் மறுப்பு.
  • ஆக.25: சுவாதி கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்.
  • ஆக.30: சிபிஐ-க்கு மாற்றக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி.
  • செப்.18: புழல் சிறையில் ராம்குமார் தற்கொலை.
     

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com