தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் குடிநீர் வசதிகள், சுகாதாரமான கழிப்பறை வசதிகள் உள்ளனவா என அடிக்கடி ஆய்வு செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் உணவுப் பொருள்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக பெரம்பூரைச் சேர்ந்த தேவராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார்.
நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் அமர்வு இந்த வழக்கினை இன்று விசாரித்தது. விசாரணைக்குப் பின்னர் நீதிபதி கூறும்போது, 'திரையரங்குகளில் உணவுப் பொருள்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டால் சட்டப்படி குற்றம். ஏற்கெனவே, அரசுத் தரப்பில் பொருள்களுக்கான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதைவிட அதிகமான விலைக்கு விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து தமிழக அரசு ஆய்வு செய்ய வேண்டும்.
அதுபோன்று தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் குடிநீர் வசதிகள், சுகாதாரமான கழிப்பறை வசதிகள் உள்ளனவா எனவும் தமிழக அரசு தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும்' என நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.