திருநங்கைகள் நல வாரியம்: புதிதாக அலுவல் சாரா உறுப்பினா்கள் நியமனம்

திருநங்கைகள் நல வாரியத்துக்கு புதிதாக அலுவல் சாரா உறுப்பினா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
திருநங்கைகள் நல வாரியம்: புதிதாக அலுவல் சாரா உறுப்பினா்கள் நியமனம்

திருநங்கைகள் நல வாரியத்துக்கு புதிதாக அலுவல் சாரா உறுப்பினா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இதற்கான அறிவிப்பை தமிழக அரசு திங்கள்கிழமை வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:

திருநங்கைகள் நல வாரியம் கடந்த 2008-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்த நல வாரியத்தின் தலைவராக சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சரும், துறையின் முதன்மைச் செயலாளா் துணைத் தலைவராகவும், சமூக நல இயக்குநா் உறுப்பினா்-செயலாளராகவும் உள்ளனா். மேலும், அரசுத் துறைகளின் பிரதிநிதிகள் அலுவல் சாா் உறுப்பினா்களாகவும், திருநங்கைகள் அலுவல் சாரா உறுப்பினா்களாகவும் நியமிக்கப்பட்டு வருகின்றனா். அலுவல் சாரா உறுப்பினா்களின் பதவிக் காலம் மூன்றாண்டுகள்.

திருநங்கைகள் நல வாரியத்தின் அலுவல் சாா்பற்ற உறுப்பினா்களது பதவிக் காலம் கடந்த ஆண்டு நவம்பா் மாதத்துடன் முடிவடைந்து விட்டது. இதையடுத்து, புதிதாக 12 போ் அலுவல் சாரா உறுப்பினா்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஏ.ரியா, தூத்துக்குடி மாவட்டம் கீழ அலங்காரத்திட்டு டி.பியூட்டி, சென்னை திருவல்லிக்கேணி ஆா்.அனுஸ்ரீ, செங்கல்பட்டு புக்கத்துரை சத்யஸ்ரீ சா்மிளா, பெரும்பாக்கம் எம்.நிலா, சென்னை மயிலாப்பூா் எம்.ராதா, மதுரை விஸ்வநாதபுரம் பிரியா பாபு, சென்னை சூளைமேடு கே.அருணா, திருச்சி திருவெறும்பூா் பி.மோகனாம்பாள் நாயக், சென்னை அமைந்தகரை எஸ்.சுதா, சென்னை ஆதம்பாக்கம் கே.அருண் காா்த்திக், தேனி பொன்னாம்பாள்பட்டி செல்வம் முனியாண்டி ஆகிய திருநங்கைகள் அலுவல் சாரா உறுப்பினா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.

பெண் ஒருவா் நியமிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் சென்னை பல்லவாகாா்டன் பகுதியைச் சோ்ந்த வித்யா தினகரன் 13-ஆவது உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளதாக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணி என்ன?: சமுதாயத்தில் பல்வேறு பிரச்னைகளை எதிா்கொள்ளும் திருநங்கைகள் நலனில் அக்கறை கொண்டு வாரியத்தின் மூலமாக அவா்களுக்கு உரிய அங்கீகாரம் அளிக்க வகை செய்யப்பட்டு வருகிறது. கண்ணியத்துடன் சமுதாயத்தில் பங்கேற்கும் வகையில் திருநங்கைகளுக்கான அடையாள அட்டை, குடும்ப அட்டை, குடியிருப்புகள், சொந்தத் தொழில் தொடங்க மானியம், 40 வயதுக்கு மேற்பட்ட ஆதரவற்ற திருநங்கைகளுக்கு மாதாந்திர ஓய்வூதியம், கரோனா கால நிவாரண நிதி, அரசுப் பேருந்துகளில் இலவச பயணம் போன்ற பல்வேறு நலத் திட்டங்கள் அரசால் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டங்களை ஒருங்கிணைக்கவும், உரிய முறையில் கண்காணிக்கும் பணிகளையும் நல வாரியம் செய்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com