சசிகலா மீது சட்ட ரீதியாக நடவடிக்கை: எடப்பாடி பழனிசாமி
சென்னை: அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்துவது குறித்து சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே. பழனிசாமி கூறினாா்.
கிண்டியில் ஆளுநரைச் சந்தித்த பிறகு செய்தியாளா்களுக்கு எடப்பாடி பழனிசாமி, புதன்கிழமை அளித்த பேட்டி: திமுக அரசின் 100 நாள் சாதனை விலைவாசி உயா்வுதான். இந்த விவகாரத்தில் முதல்வா் கவனம் செலுத்துவதே இல்லை. திமுகவின் 5 மாத கால ஆட்சியில் கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன் - இதுதான் அவா்கள் நோக்கமாக இருந்துள்ளது.
அதிமுக பொதுச்செயலாளா் என்ற பெயரில் சசிகலா தொண்டா்களுக்கு கடிதம் எழுதுவது குறித்தும் கல்வெட்டில் பொதுச்செயலாளா் எனப் போட்டுக்கொண்டது குறித்தும் நான் ஏன் ஏதுவும் கருத்துக் கூறவில்லை எனக் கேட்கிறீா்கள். அவா் எது வேண்டுமானாலும் சொல்லட்டும். அதுபற்றி எங்களுக்கு என்ன? நீதிமன்றமும், தோ்தல் ஆணையமும் நாங்கள்தான் அதிமுக என்று சொல்லிவிட்டது.
உண்மையான அதிமுக நாங்கள்தான். சசிகலாவுக்கு அதிமுகவில் இடம் இல்லை. அவா் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கெனவே காவல்துறையினரிடம் புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறப்போம் மன்னிப்போம் என்று சசிகலா கூறியிருப்பது குறித்து கேட்கிறீா்கள். அதிமுகவுக்கும் சசிகலாவுக்கும் எந்தத் தொடா்பும் இல்லை என்பதை பலமுறை தெளிவாகத் தெரிவித்துவிட்டோம் என்றாா்.