சிதம்பரம்: கடலூர் மாவட்டத்தில் பெண்கள் மற்றும் இளைஞர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நவீன விவசாயத் திட்டத்தை செயல்படுத்தவுள்ளோம் என அப்துல்கலாம் லட்சிய இந்திய இயக்கத் தலைவர் முனைவர் வி.பொன்ராஜ் தெரிவித்தார்.
சிதம்பரத்தில் மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் ஆலோசகரும், அப்துல்கலாம் லட்சிய இந்தியா இயக்க தலைவருமான வி.பொன்ராஜ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
சிதம்பரம் அருமையான ஆன்மீக ஸ்தலம். பல்வேறு பாடல் பெற்ற வடலூர் வள்ளலார் உள்ளிட்ட சான்றோர்களை கொடுத்த தெய்வீக ஸ்தலம் சிதம்பரம். இந்த அருமையான ஆன்மீக ஸ்தலமாக உள்ள சிதம்பரம் அடங்கிய கடலூர் மாவட்டம் கல்வியிலும், வேலைவாய்ப்புலும் மாநிலத்தில் 32 வது இடத்திலும் உள்ளது. இங்கு சமூக ஆர்வலர்கள் அரசு பள்ளியை கொண்டாடுவோம் என்ற இயக்கத்தை தொடங்கி அரசு பள்ளி ஆசிரியர்களை ஊக்குவித்து அதன் மூலம் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு கல்வியில் ஈடுபாட்டையும் ஏற்படுத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் முழுவதும் இதை விரிவுபடுத்தி அரசுப் பள்ளிகளுக்கு தேவையான கழிப்பறை வசதி, ஸ்மார்ட் கிளாஸ், நூலகம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை சிஎஸ்ஆர் நிதி மூலமாகவும், பல்வேறு பொது நிறுவனங்கள் மூலமாகவும் அப்துல்கலாம் லட்சிய இந்தியா இயக்கம், அரசுப் பள்ளிகளை கொண்டாடுவோம் இயக்கத்தில் மூலம் செயல்படுத்த முடிவெடுத்துள்ளோம்.
தமிழக அரசுடன் இணைந்து நமக்கு நாமே திட்டத்தின் கீழ் நல்ல மாணவர்களை உருவாக்க பாடுபடுவோம். இரண்டாவது வேலைவாய்ப்பு அப்துல்கலாம் கனவு கண்ட நவீன விவசாயம் திட்டத்தை பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு, விவசாயிகளுக்கு கற்றுக் கொடுத்து அதன் மூலம் வருமானத்தை இரண்டு மடங்காக உயர்த்த ஒரு சிறப்புத் திட்டத்தை கூடிய விரைவில் கடலூர் மாவட்டத்தில் அறிமுகப்படுத்தவுள்ளோம். இதன்மூலம் கடலூர் மாவட்டத்தில் கல்வி, விவயாத்திலும், வேலைவாய்ப்பிலும் முதலிடத்திற்கு கொண்டு வர முயற்சி மேற்கொள்வோம்.
திமுக தலைமையிலான ஆட்சி நல்ல நோக்கத்தோடும் நல்ல எண்ணத்தோடு முயற்சியை தொடங்கியுள்ளது. முதல்வர் அனைவரையும் அரவணைத்தும், அனைவரது கருத்துகளை கேட்டு பல்வேறு சமூதாய மக்களை இணைத்து சமூக நல்லிணக்கத்தை உருவாக்கும் வகையில் நடைமுறைபடுத்தினால் நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
முதல்வருக்கு 5 லட்சத்து 20 ஆயிரம் கடன் என்ற மிகப்பெரிய சுமை உள்ளது. அதனை தமிழக அரசு அடைக்க வேண்டும். தமிழகத்தில் 14 லட்சம் பேர் அரசு ஊழியர்கள், 3 லட்சம் பேர் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுகின்றனர்.
மொத்தமே 17 லட்சம் பேர் தான் அரசு ஊழியர்கள். மிச்சமுள்ள 2 கோடி படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. ஒரு கோடியே 20 லட்சம் பேர் படிப்பை பாதியில் நிறுத்திய இடைநிற்றல் கொண்டவர்கள். 70 லட்சம் பேர் பட்டம் முடித்தவர்கள் உள்ளார்கள். 4 லட்சம் பேர் ஆராய்ச்சி படிப்பு பயின்றவர்கள் உள்ளார்கள். இவர்களுக்கு தனி நபர் வருமானத்தை உயர்த்தும் நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். தற்போதைய பட்ஜெட்டிலும், வேளாண் பட்ஜெட்டிலும் அதற்கான முன்னெடுப்பு இல்லை என்பது ஏமாற்றம் அளிக்கிறது. குறைந்த அரசு 3 லட்சம் கோடி வருமானத்தை உயர்த்தினால்தான் அடுத்த 5 ஆண்டுகளில் கடனை அடைக்க முடியும். விஷன்-20 தொலைநோக்கு திட்டத்தை கலாம் ஆலோசனையின் பேரில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்தார். அவர் உடல்நிலை சரியில்லாமல் போன பிறகு அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. படித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும். அப்படி இல்லையெனில் பொருளாதார வளர்ச்சியை மேற்கொள்ள முடியாது.
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், இந்திய குடியுரிமை சட்டத்திருத்தை எதிர்த்து தீர்மானம் போடவது என்பது சரியான தீர்வாகாது. தமிழகத்தில் முக்கியமான பிரச்சனைகளை சட்டப் போராட்டத்தின் மூலம்தான் அதனை வென்றெடுக்க முடியும். குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதனால் எந்த பலனும் கிடையாது. குடியுரிமை திருத்த சட்டம் என்பது ஒரு மதத்தை சேர்ந்தவர்களை ஒதுக்கிவிட்டு, மதத்தை சார்ந்து இவர்களுக்கு குடியுரிமை உண்டு, இவர்களுக்கு குடியுரிமை இல்லை என்று சொன்னால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. கரோனா தொற்றினால் ஐஎஸ்ஆர்ஓவில் ஆராய்ச்சிக்கான முதலீடுகள் குறைந்துவிட்டது. ஒரு வருடத்திற்கு 20 லாஞ்ச் பண்ணக்கூடிய தகுதி இஸ்ரோவிற்கு உள்ளது. சந்திராயன்-3 பண்ண முடியும். மத்திய அரசின் அனுகுமுறையில் மாறியதால், இஸ்ரோவையே தனியார் மயமாக்கும் முயற்சியில் மத்தியஅரசு ஈடுபட்டுள்ளது.
விஷன் ஒரியண்டட் ஆராய்ச்சிக்கும், அகடமிக் ஆராய்ச்சிக்கும் வித்தியாசம் உள்ளது. விஷன் ஓரியண்டட் ஆராய்ச்சிக்கு மத்தியஅரசு முக்கியத்துவம் கொடுத்து, இன்னும் அதிகமாக நிதி உதவி செய்தால் கண்டிப்பாக இஸ்ரோ சாதனை படைக்கும். குறைந்த நமது விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். ககன்யா மிஷன் தள்ளிப்போடப்பட்டுள்ளது. 2030-க்குள் ககன்யா மிஷனை சாதிக்க வேண்டும். அதற்குத் தேவையான ஆராய்ச்சிக்கான முதலீடை மத்திய அரசு வழங்க வேண்டும் என வி.பொன்ராஜ் தெரிவித்தார். பேட்டியின்போது அரசுப் பள்ளிகளை கொண்டாடுவோம் இயக்க நிர்வாகிகள் வீனஸ் அன்பழகன், ஆசிரியர் அருணாசலம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.