அதிமுகவின் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனையில் சொகுசு கார்கள், ரொக்கப் பணம், நகைகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.
இது தொடர்பாக, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு தொடர்புடைய 35 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் ரூபாய் 34.01 லட்சம் ரொக்கப் பணம், ரூபாய் 1.80 லட்சம் வெளிநாட்டு பணம், ரோல்ஸ் ராய்ஸ் உட்பட 9 சொகுசு கார்கள், 623 சவரன் தங்க நகைகள், 47 கிராம் வைர நகைகள், 7.2 கிலோ வெள்ளிப் பொருட்கள், வங்கி கணக்கு புத்தகங்கள், சொத்து ஆவணங்கள், ஹார்டு டிஸ்குகள், ஐந்து கணினிகள் உள்ளிட்டவைப் பறிமுதல் செய்யப்பட்டன.
இதையும் படிக்க- வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் ஆப்கன் தூதர்கள்
மேலும் ரூ.30 லட்சம் மதிப்புள்ள 275 யூனிட் மணலும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணிக்கு சொந்தமான மற்றும் அவருக்கு தொடர்புடைய 35 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை இன்று சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.