சொத்து வரி உயர்வால் வாடகை அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் சொத்து வரி உயர்த்தப்பட்டதற்கு விளக்கம் அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பேசினார். முதல்வரின் பதில் திருப்தியளிக்காததால் அதிமுக, பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:
“மக்கள் அதிர்ச்சி அடையும் அளவிற்கு கடுமையாக சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. கரோனாவால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் சொத்து வரி உயர்வை திரும்பப் பெற வேண்டும் என அமைச்சரிடம் வலியுறுத்தினோம்.
சொத்து வரியை உயர்த்த வேண்டும் என மத்திய அரசு கூறியதாக தெரிவித்துள்ளனர். ஆனால், மத்திய அரசின் அறிவிப்பில் எந்த இடத்திலும் சொத்து வரியை கண்டிப்பாக உயர்த்த வேண்டும் எனக் குறிப்பிடவில்லை.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் வசிக்கும் மக்கள் வரி உயர்வால் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். வாடகை வீட்டில் வசிக்கும் மக்களுக்கும் சொத்து வரி உயர்வால், வாடகை அதிகமாக கொடுக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.”