சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் அமைச்சர் கே.என். நேரு மானியக் கோரிக்கையை தாக்கல் செய்தார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் 56 புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
முக்கிய அறிவிப்புகள் விவரம்..
1. தூய்மை பணியாளர்களுக்கு பல்வேறு அரசு நலத்திட்டங்களை ஒருங்கிணைத்து பயன்பெறச் செய்ய நடவடிக்கை. மாற்றுத் தொழில் தொடங்க, வங்கிகள் மூலம் சிறு கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
2. சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படும்.
3. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் மக்கள் பிரதிநிதிகளுக்கும் பயிற்சி அளித்தல்.
4. சென்னையில் ரூ.400 கோடி மதிப்பீட்டில், ஏனைய மாநகராடசி மற்றும் நகராடசிகளில் ரூ.275 கோடி மதிப்பீட்டிலும் மழைவெள்ளம், குடிநீர் மற்றும் பாதாரச் சாக்கடை திட்டப் பணிகளால் பழுதடைந்த சாலைகள் மேம்படுத்தப்படும்.
5. தமிழகம் முழுவதும் கோவை, கரூர் உள்ளிட்ட நகராட்சிகளில் 53 புதிய சந்தைகள் உருவாக்கப்படும்.
6. பிராட்வே பேருந்து நிலையத்தில் பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து பேருந்து நிலையம் அமைக்கப்படும்.
7. சென்னை, மதுரை, கோவையில் குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டங்கள் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
8. பேரூராட்சிகளில் 11,253 வீடற்ற ஏழைகளுக்கு, அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு ஒன்றிற்கு ரூ.2.10 லட்சம் மானியமாக வழங்கப்படும்.
9. சென்னை வள்ளுவர் கோட்டம் சந்திப்பில் புதிய மேம்பாலம் அமைக்கப்படும்.
10. சென்னை மெரீனாவைப் போல, பெசன்ட் நகர் கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கு நிரந்தர மர நடைபாதை ரூ.1கோடியில் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.