தந்திரங்களை தாய்மொழி கொண்டு மக்கள் வெல்வார்கள் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கூறியுள்ளார்.
தில்லியில் ஏப்ரல் 8 ஆம் தேதி நடந்த நாடாளுமன்றத்தின் 37 ஆவது அலுவல் மொழிக் குழுக் கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசுகையில், “அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. இந்தி மொழியை உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல, ஆங்கிலத்திற்கு மாற்றாக ஏற்க வேண்டும். பல மொழி பேசும் மாநில மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும்போது, அது இந்தியாவின் மொழியில் இருக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.
அவரது இந்த கருத்துக்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பில் இருந்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், தனது ட்விட்டர் பக்க பதிவில் கூறியிருப்பதாவது:
அரியணையில் யார் உட்காருவது ஆங்கிலமா? இந்தியா? என்றால் எங்கள் பதில் எட்டாவது அட்டவணையின் 22 மொழிகளுமே.
இந்தியைத் தவிர மற்ற மொழிகளை அதிகாரத்துக்கு வரவிடாமல் தடுப்பதும், ஆங்கிலத்தை அகற்றுவதுமே மத்திய அரசின் தந்திரம்.
தந்திரங்களை தாய்மொழி கொண்டு மக்கள் வெல்வார்கள் என்று கூறியுள்ளார்.