கும்பக்கரை அருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப்பயணிகளின் செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர்.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் நீர்வரத்து குறைந்து வந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்நிலையில், கொடைக்கானல் மலைப்பகுதியில் சில நாள்களாக மழை பெய்து வந்தது. இதனால் கும்பக்கரை அருவியில் நீர்வரத்து அதிகரித்தது. புதன்கிழமை இரவு பெய்த கனமழையால் வியாழக்கிழமை காலை முதல் கும்பக்கரை அருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.
காட்டாற்று வெள்ளத்தால் சுற்றுலாப்பயணிகள் அருவிக்கு செல்ல பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டதையடுத்து, இன்று காலை முதல் சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத்துறையினர் தடைவிதித்தனர்.
சீரான நீர்வரத்து ஏற்படும் வரை அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என தேவதானப்பட்டி வனச்சரக அலுவலர் டேவிட் தெரிவித்தார்.