மங்கலதேவி கண்ணகி கோயில் முழுநிலவு விழா சனிக்கிழமை நடைபெறுவதையொட்டி தமிழக எல்லை பளியன்குடி மலைப்பாதை வழியாக சுமார் 5,000 ஆண், பெண் பக்தர்கள் சிறுவர், சிறுமியர் நடைப்பயணம் மேற்கொண்டனர்.
புலிகள் காப்பகம் சார்பில் செல்லும் பக்தர்கள் நெகிழி பைகள் போன்றவை கொண்டுசெல்ல அனுமதிக்கவில்லை. இதுபற்றி புலிகள் காப்பக வனத்துறையினர் கூறும்போது அதிகாலை 4:00 மணி முதலே பக்தர்கள் நடைப்பயணமாக 5,000 பேர் வரை சென்று உள்ளனர் என்று தெரிவித்தனர்.
நடைப்பயணம் சென்ற தேசிய செட்டியார் பேரவை சார்பில் ஜெகநாத் மிஸ்ரா தலைமையில் 5 லிட்டர் தண்ணீர் கேன் 2,000 பேருக்கு வழங்கப்பட்டது.
கூடலூர் அரசு ஆரம்பச் சுகாதார நிலையம் சார்பில், .சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது. சித்த மருத்துவ அலுவலர் சிராஜூதீன் தலைமையில், அதிகாலை முதல் நிலவேம்பு கஷாயம், கபசுரக் குடிநீர், வலி நிவாரண தைலங்கள் சூப் வகைகள் வழங்கப்பட்டது.
தரிசனம் செய்து திரும்பும் பொதுமக்களுக்கு பெயின்பாம் பிண்டத்தைலம், கற்பூராதி தைலம், வாத கேசரி தைலம் வழங்கப்பட்டதுடன், நடைப்பயணம் மேற்கொண்டு கீழே வரும் பக்தர்களுக்கு உடல்வலி போக்கும் மசாஜ் வர்ம சிகிச்சையும் செய்யப்பட்டது.
புதுச்சேரி மண்டல சித்த மருத்துவ ஆராய்ச்சி கழகம் சார்பில் அமுக்கரா மாத்திரைகள் 2,000 பேர்களுக்கு வழங்கப்பட்டது என்றார். ஓமியோபதி மருத்துவ முகாம் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் மாரியப்பன் தலைமையில் நடைபெற்றது.
சிறப்புப் பேருந்து வசதி
சனிக்கிழமை நடைபெற்ற மங்கலதேவி கண்ணகி கோயில் முழுநிலவு விழாவிற்கு கம்பம் மற்றும் கூடலூர் பேருந்து நிலையத்திலிருந்து தமிழக எல்லை பளியன்குடி மலை அடிவாரம் வரை அரசுப் போக்குவரத்துக் கழக சிறப்புப் பேருந்து வசதி செய்யப்பட்டிருந்தது.
சுற்றுலாத் துறை சிறப்பு அரங்கு
பளியன் குடி மலை அடிவாரத்தில் தமிழக சுற்றுலாத்துறை சார்பில் கண்ணகி வரலாற்றை விளக்கும் படங்கள் மற்றும் நினைவுக் குறிப்புகளை கண்காட்சியாக வைத்து இருந்தனர். பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.