கள்ளழகர் நிகழ்வில் கூட்ட நெரிசலில் சிக்கி இருவர் பலி; 15 பேர் காயம்
மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளிய நிகழ்வின்போது கூட்ட நெரிசலில் சிக்கிய இருவர் உயிரிழந்தனர். மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர்.
சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவம் சனிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் வைகை ஆற்றின் ஆழ்வார்புரம் பகுதியில் திரண்டனர். இதில் ஏவி பாலத்தின் கீழ் பகுதியில் நின்று கொண்டிருந்தவர்கள் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் பகுதியை நோக்கி முன்னேறிச் சென்றபோது நெரிசல் ஏற்பட்டது. இதில் பலருக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். அதையடுத்து அவர்கள் அனைவரும் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இவர்களில் 60 வயது உடைய பெண், 50 வயதுடைய ஆண் இருவரும் உயிரிழந்தனர். மேலும் 15 பேர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இறந்தவர்களின் பெயர் விவரம் உடனடியாகத் தெரியவரவில்லை. அவர்களது புகைப்படத்தை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
அவர்கள் பற்றி தகவல் தெரிந்தவர்கள் செய்தி மக்கள் தொடர்பு அலுவலரை 9498042434 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்!