/

கோவை தண்டுமாரியம்மன் கோயில் தீச்சட்டி திருவிழா: மாநகரில் போக்குவரத்து மாற்றம்

கோவையில் பிரசித்தி பெற்ற தண்டுமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, முக்கிய நேர்த்திக் கடன் செலுத்தும் நிகழ்வான தீச்சட்டி ஏந்தி ஊர்வலம் செல்லும் நிகழ்வு நடைபெற்றது.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 9:05 am

DIN

கோவையில் பிரசித்தி பெற்ற தண்டுமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, முக்கிய நேர்த்திக் கடன் செலுத்தும் நிகழ்வான தீச்சட்டி ஏந்தி ஊர்வலம் செல்லும் நிகழ்வு நடைபெற்றது. இதனால்  குறிப்பிட்ட சில பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு  காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

கோவை, அவிநாசி சாலையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற தண்டு மாரியம்மன் கோயில் தீச்சட்டி ஊர்வலமானது இன்று நடைபெற்றது. இந்த ஊர்வலம் மணிக்கூண்டு பகுதியில் உள்ள கோணியம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு டவுன்ஹால், ஓப்பணக்கார வீதி என அவிநாசி ரோடு மேம்பாலத்தின் கீழ்ப்பகுதி வழியாக தண்டுமாரியம்மன் கோயிலை வந்தடைந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீச்சட்டியை கையில் ஏந்தியபடி நேர்த்திக்கடன் செலுத்தினார்.

இந்த தீச்சட்டி ஊர்வலத்தை முன்னிட்டு இன்று காலை முதல் மதியம் 12 மணி வரை போக்குவரத்தில் தற்காலிக மாற்றம் செய்யப்படுவதாக கோவை மாநகர போலீசார் அறிவித்துள்ளனர். 

அதன்படி, பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு சாலையில் இருந்து வரும் வாகனங்கள் உக்கடத்தை அடைந்து நேராக ஒப்பணக்கார வீதிக்குள் செல்லாமல், வாலாங்குளம் பையாஸ் வழியாக திருச்சி சாலையை அடைந்து செல்லவேண்டிய இடங்களுக்கு செல்லலாம். அல்லது, பேரூர் பைபாஸ் சாலையில் சென்று செல்லவேண்டிய இடங்களுக்கு செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல, மேட்டுப்பாளையம் சாலை மற்றும் தடாகம் சாலையிலிருந்து பாலக்காடு செல்லும் அனைத்து வாகனங்களும், பொன்னையாராஜபுரம், சொக்கம்புதூர், சிவாலயா தியேட்டர் சந்திப்பு, பேரூர் பைபாஸ் ரோடு வழியாக உக்கடம் அடைந்து செல்லலாம். 

மேலும், பேரூர் சாலையிலிருந்து நகருக்குள் வரும் வாகனங்கள் செட்டி வீதி, சலிவன் விதி வழியாக காந்திபார்க் அடைந்து அல்லது பேரூர் பைபாஸ் ரோடு வழியாக உக்கடம் அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

அதே போல், அவிநாசி சாலை பழைய மேம்பாலம் வழியாக உக்கடம் செல்லும் அனைத்து வாகனங்களும் அண்ணா சிலை சந்திப்பு அல்லது ஜே.எம். பேக்கரி சந்திப்பிலிருந்து இடது புறம் திரும்பி ஒசூர் ரோடு, பந்தயச் சாலை வழியாகவோ அல்லது ரயில் நிலையம் வழியாகவோ திருச்சி ரோட்டை அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

அதேபோல, திருச்சி சாலையில் இருந்து டவுன்ஹால் வழியாக உக்கடம் செல்லும் வாகனங்களில் கனரக வாகனங்கள், கிளாசிக் டவர் வழியாக சுங்கம் பைபாஸ் அடைந்தும், இலகுரக வாகனங்கள் வின்சென்ட் ரோடு வழியாகவும், உக்கடம் அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம். 

மேலும், ஊர்வலத்தின் இறுதிப்பகுதி முக்கியமான விதிகளை கடக்கும்போது, போக்குவரத்து வழக்கம் போல் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.