தேர் விபத்துக்கு சாலை உயர்த்தப்பட்டதே காரணம்: கிராம மக்கள் புகார்
தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் நிகழ்ந்த தேர் விபத்துக்கு சாலை உயர்த்தப்பட்டதே காரணம் என கிராம மக்கள் தெரிவித்தனர்.
இது குறித்து கிராம மக்கள் தெரிவித்ததாவது:
அப்பர் சதயவிழா தேர் எப்போதும் போல வழக்கமான அளவிலேயே செய்யப்பட்டது. இதனிடையே, களிமேடு முதன்மைச் சாலையில் ஓர் ஆண்டுக்குள் புதிதாக தார் சாலை அமைக்கப்பட்டது. இந்தச் சாலை ஏற்கெனவே இருந்த அளவைவிட சற்று உயரமாகப் போடப்பட்டது.
தேர் விபத்துக்கு புதிதாக போடப்பட்ட சாலையே காரணம் கிராம மக்கள் புகார்.
இதனால் தேரை முதன்மைச் சாலையில் இழுத்து வரும்போது ஆடி அசைந்து வந்தது. அப்போது, மேலே செல்லும் உயர் அழுத்த மின் கம்பியில் தேரின் உச்சிப்பகுதி உரசியது. இதுவே இந்த விபத்துக்கு காரணமாக அமைந்தது. மேலும் சாமி வருவதையொட்டி சாலையில் தண்ணீர் ஊற்றப்பட்டிருந்ததால் மின்சாரம் வேகமாக பரவியது. இதுவும் உயிரிழப்பு அதிகமாவதற்கு காரணமாக அமைந்துவிட்டது.
விபத்துக்குள்ளான தேர்.
இதனால் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக காப்பாற்ற முடியாமல் போய்விட்டது. மின்சாரம் பாய்ந்த வேகத்தில் மின்தடை ஏற்பட்டது.
இதையடுத்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தவர்களின் நெஞ்சுப் பகுதிகளை அழுத்தி முதலுதவி சிகிச்சை செய்தோம். இதன் மூலம் சிலர் உயிருடன் மீண்டனர். பின்னர் அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம். இருப்பினும், எங்களால் பலரைக் காப்பாற்ற முடியாமல் போய்விட்டது வேதனையாக இருக்கிறது என கிராம மக்கள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

