தமிழகம் முழுவதும் 25 ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைசசர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மானிய கோரிக்கை விவாதத்தின் மீதான பதிலுரையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைசசர் மா.சுப்பிரமணியன் தெரிவித்ததாவது, தமிழகத்தில் கூடுதலாக 1,450 மருத்துவ மாணவர் சேர்க்கை இந்த ஆண்டே தொடங்கப்படும். ரூ.1,018.85 கோடியில் 19 அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்படும்.
12 மாவட்ட அரசு மருத்துவமனைகளில் ரூ.15 கோடியில் புதிய ஒருங்கிணைந்த ஆய்வகங்கள் அமைக்கப்படும். காஞ்சிபுரம் உத்தரமேரூர் தாலுகா மருத்துவமனைக்கு ரூ.10 கோடியில் புதிய கட்டடங்கள் கட்டப்படும். மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 4,308 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும். 1,021 உதவி மருத்துவர்கள், 3,287 மருத்துவம் சார்ந்த இதர பணியிடங்கள் நிரப்பப்படும்.
மக்களைத்தேடி மருத்துவ திட்டத்தில் ரூ.423.64 கோடியில் ஒருங்கிணைந்த ஆய்வக சேவைகள் தொடங்கப்படும். தென்காசி அரசு மருத்துவமனை ரூ.10 கோடி மதிப்பில் தரம் உயர்த்தப்படும். தமிழகம் முழுவதும் 25 ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும். சென்னை கிண்டியில் கிங்ஸ் மருத்துவ மையத்தில் நவீன, காமா நுண்கதிர் அறை ரூ.1.90 கோடியில் கட்டப்படும்.
பதிவுபெற்ற பம்பரம்பரை மருத்துவர்கள் ஓய்வு ஊதியம் ரூ.1,000-ல் இருந்து ரூ.3,000ஆக உயர்த்தப்படும். அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பொதுமக்களுக்கு சர்க்கரை நோய் பரிசோதனை காலை 7 மணி முதல் செய்யப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.