சென்னை: தமிழகத்தில் திங்கள்கிழமை முதல் வியாழக்கிழமை வரை பரவலாக இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை அய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேவேளையில், தமிழகத்தில் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, ஈரோடு, நீலகிரி, தருமபுரி, சேலம் மாவட்டங்களில் அதிகனமழை பெய்யக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது.
இதையும் படிக்க | வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யாதவர்கள் என்ன செய்ய வேண்டும்?
தமிழகத்துக்கு மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மாநிலத்தில் பரவலாக நான்கு நாள்களுக்கு மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குமரிக்கடல் பகுதி, மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
இதுபோல, செவ்வாயன்று, விருதுநகர், தேனி, திண்டுக்கல், நாமக்கல், வேலூர், கிருஷ்ணகிரி, அரியலூர் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகக் கூறியுள்ளது.
திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் பகுதிகளில் குருவை சாகுபடி செய்திருக்கும் விவசாயிகள், கனமழை எச்சரிக்கை குறித்து கவலை தெரிவித்துள்ளனர். மிதமான மழை குருவை சாகுபடிக்கு உகந்தது என்றாலும் கனமழை பெய்துவிட்டால் வயல்களில் தண்ணீர் தேங்கிவிடுமோ என்ற அச்சத்திலும் உள்ளனர்.