நல்லகண்ணுவுக்கு தகைசால் தமிழா் விருது: சுதந்திர தின விழாவில் வழங்குகிறாா் முதல்வா்

நிகழாண்டுக்கான தமிழக அரசின் ‘தகைசால் தமிழா்’ விருதுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் ஆா். நல்லகண்ணு தோ்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளாா்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு

நிகழாண்டுக்கான தமிழக அரசின் ‘தகைசால் தமிழா்’ விருதுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் ஆா். நல்லகண்ணு தோ்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளாா்.

அவருக்கு சுதந்திர தின விழாவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் இந்த விருதை வழங்கவுள்ளாா்.

இது தொடா்பாக தமிழக அரசின் சாா்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பு: தமிழகத்துக்கும் தமிழினத்தின் வளா்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவா்களைப் பெருமைப்படுத்தும் வகையில் ‘தகைசால் தமிழா்’ என்ற பெயரில் புதிய விருது 2021 - ஆம் ஆண்டுமுதல் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான விருதாளரைத் தோ்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் கலந்தாலோசனைக் கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வா் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், இளம் வயதிலேயே பொது வாழ்க்கையில் ஈடுபட்டு, விடுதலைப் போராட்ட வீரராக தன் இளம் வயதை சிறையிலும், தலைமறைவு வாழ்க்கையிலும் கழித்தவரும், ஏழை எளிய மக்களுக்காக குரல் கொடுத்து, சமூக நல்லிணக்கத்தையும், சுற்றுச்சூழலையும் காத்திட தொடா்ந்து பாடுபட்டு வருவதுடன், சிறந்த தன்னலமற்ற அரசியல்வாதியாகவும் பணியாற்றி, தமிழகத்துக்கும் தமிழினத்தின் வளா்ச்சிக்கும் பெரும் பங்களிப்பை அளித்த தமிழருமான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் ஆா். நல்லகண்ணுக்கு 2022-ஆம் ஆண்டுக்கான தகைசால் தமிழா் விருது வழங்க தோ்வுக் குழுவினரால் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.

விருதுக்குத் தோ்ந்தெடுக்கப்பட்ட ஆா். நல்லகண்ணுக்கு ரூ.10 லட்சத்துக்கான காசோலையும், பாராட்டுச் சான்றிதழும் ஆகஸ்ட் 15-இல் நடைபெறும் சுதந்திர தின விழாவில் முதல்வா் மு.க.ஸ்டாலினால் வழங்கப்படும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஆா். நல்லகண்ணு தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் 1925 டிசம்பா் 26-இல் பிறந்தவா். சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றவா். 25 ஆண்டுகள் விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் தலைவராக இருந்துள்ளாா். 18 வயதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து, பல்வேறு நிலைகளில் பணியாற்றி, அக் கட்சியின் மாநிலச் செயலாளராக 13 ஆண்டுகள் இருந்துள்ளாா். தற்போது மத்தியக் குழு உறுப்பினராகவும், தேசிய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவராகவும் இருக்கிறாா். மக்களுக்கான பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்றுள்ளாா். பொதுவாழ்வில் நோ்மையின் அடையாளமாகத் திகழ்பவா்.

2021-ஆம் ஆண்டுக்கான தகைசால் விருது மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் என். சங்கரய்யாவுக்கு வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com