ஈரோடு: இலவச வேட்டி சேலை உற்பத்தியை விரைவில் தொடங்க வலியுறுத்தி ஈரோட்டில் தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 300 க்கும் மேற்பட்ட விசைத்தறி உரிமையாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழக அரசால் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கலுக்கு வழங்கப்படும் இலவச வேஷ்டி, சேலை உற்பத்திக்கான அரசாணை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் வெளியிடப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கு 1 லட்சத்து 80 ஆயிரம் வேஷ்டி, 1 லட்சத்து 80 ஆயிரம் சேலை உற்பத்திக்காக ரூ.493 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஜூலை மாதம் அரசாணை வெளியிடப்பட்டது. கைத்தறி மூலம் 30 லட்சம் வேஷ்டி, சேலை உற்பத்திக்கான அரசாணை வெளிடப்பட்ட நிலையில் இதுவரை விசைத்தறி மூலம் உற்பத்தி செய்ய அரசாணை வெளியிடப்படவில்லை.
உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 300 க்கும் மேற்பட்ட விசைத்தறி உரிமையாளர்கள்.
எனவே, விரைவில் தமிழக அரசு இலவச வேஷ்டி, சேலை உற்பத்திக்கான அரசாணையை வெளியிட வலியுறுத்தி ஈரோட்டில் தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 300-க்கும் மேற்பட்ட விசைத்தறி உரிமையாளர்கள் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு மாநிலத் தலைவர் எல்.கே.எம். சுரேஷ் கூறியதாவது: தமிழகம் முழுவதும் 225 கூட்டுறவு சங்கங்கள் மூலம் 67 ஆயிரம் நெசவாளர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருவதாகவும், ஏற்கனவே நூல் விலை உயர்வால் நெசவாளர்கள் வேலைவாய்ப்பு குறைந்து வரும் நிலையில், இலவச வேஷ்டி, சேலை உற்பத்தி தாமதத்தால் மேலும் நெசவாளர்களுக்கு வேலை பறிபோகும் நிலையில் உள்ளதாகவும் சுரேஷ் தெரிவித்தார்.