அரூர்: பாப்பிரெட்டிப்பட்டி அருகே மாவோயிஸ்ட் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த செட்டே (எ) சீனிவாச முல்லா கெவுடு (23) என்பவரை மகாராஷ்டிர மாநில போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
மகாராஷ்டிர மாநிலம், பங்கரப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த முல்லா மகன் செட்டே (எ) சீனிவாச முல்லா கெவுடு (23). இவர் மீது, அந்த மாநிலத்தில் உள்ள தர்மராஜா காவல் நிலையத்தில், 2022 பிப்ரவரியில் 10-க்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மாவோயிஸ்ட் தீவிரவாத அமைப்பில் தொடர்பில் இருந்த இவர், தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பாப்பம்பாடி அருகேயுள்ள பாரதிநகரில் விவசாயி ஒருவரது வீட்டில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்த தகவல் அறிந்த மகாராஷ்டிர போலீஸார், சனிக்கிழமை அதிகாலை நேரத்தில் செட்டே (எ) சீனிவாச முல்லா கெவுடுவை கைது செய்தனர்.