புதுச்சேரி: காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் கார் மீது தாக்குதல்
புதுச்சேரி காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வந்த மாநில பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி இரு பிரிவுகளாகச் செயல்பட்டு வருகிறது. புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி, மாநில தலைவர் சுப்ரமணியன், வைத்தியலிங்கம் எம்.பி, புதுச்சேரி காங்கிரஸ் சட்டப்பேரவை கட்சித் தலைவர் வைத்தியநாதன் ஒரு பிரிவாகவும், முன்னாள் அமைச்சர்களான கந்தசாமி, ஷாஜகான், முன்னாள் அரசுக் கொறடா அனந்தராமன் ஆகியோர் ஒரு பிரிவாகவும் செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் குண்டுராவ் தலைமையில் வைசியால் வீதியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, மாநில காங்கிரஸ் தலைவர் சுப்ரமணியன் உள்பட கட்சி நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.
அப்போது, கூட்டத்தில் பங்கேற்ற ஒரு தப்பினர் மாநிலத் தலைவரின் பதவிக் காலம் முடிவடைந்து விட்டதால் அவரை மாற்றக்கோரி கட்சி நிர்வாகிகள் பலரும் கூச்சலிட்டனர். இதனால் நாராயணசாமி கூட்டத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறினார்.
இதையும் படிக்கலாம் | சண்டீகர் விமான நிலையத்திற்கு பகத் சிங் பெயர்!
இதனைத் தொடர்ந்து மாநிலத் தலைவரை மாற்றக்கோரியும், நாராயணசாமிக்கு எதிராக கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து கூட்டத்தை முடித்துக்கொண்டு கட்சி அலுவலகத்தை விட்டு வெளியே வந்த மேலிடப் பொறுப்பாளர் குண்டுராவை கட்சியினர் முற்றுகையிட்டனர்.
அப்போது, மாநிலத் தலைவர் சுப்ரமணியன் காரில் ஏறிப் புறப்பட முயன்ற குண்டுராவை கட்சியினர் போக விடாமல் அந்த வாகனத்தை முற்றுகையிட்டு வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தினர். இதனால், காங்கிரஸ் அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.