அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்தத்தின் 7-ஆம் கட்ட பேச்சுவார்த்தை நாளை குரோம்பேட்டையில் நடைபெற உள்ளது.
தமிழக அரசு போக்குவரத்துக் கழக ஊழியா்களுக்கு 3 ஆண்டுக்கு ஒரு முறை ஊதிய உயா்வு ஒப்பந்தம் போடப்படுவது வழக்கம். 13-ஆவது ஊதிய ஒப்பந்தம் 2019-ஆம் ஆண்டு ஆகஸ்டு 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. கரோனா பாதிப்பு காரணமாக கடந்த 2 வருடமாக புதிய ஒப்பந்தம் போடுவது தள்ளிப்போனது.
14-ஆவது ஊதிய ஒப்பந்தம் ஏற்படாமல் இதுவரையில் பேச்சுவாா்த்தை நடந்து வருகிறது. ஏற்கெனவே 6 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ள நிலையில் 7-ஆம் கட்ட பேச்சுவார்த்தை நாளை குரோம்பேட்டையில் நடைபெற உள்ளது.
இதுகுறித்து போக்குவரத்துக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கான, 14-வது ஊதிய ஒப்பந்த ஏழாம் கட்ட பேச்சுவார்த்தையானது, போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தலைமையில், நாளை (23.08.2022) காலை 11.00 மணியளவில், குரோம்பேட்டை, மாநகர் போக்குவரத்துக் கழக பயற்சி மைய வளாகத்தில் நடைபெற உள்ளது.
இந்நிகழ்வில், போக்குவரத்துத்துறை அரசு முதன்மைச் செயலாளர் கே.கோபால், போக்குவரத்துக் கழக உயர் அலுவலர்கள் மற்றும் அனைத்து தொழிற்சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.