நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மீது செருப்பு வீச்சு சம்பவத்திற்கு முன்பு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக மாவட்டத் தலைவருடன் பேசிய ஆடியோ தற்போது வைரலாகி வருகிறது.
ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரா் லட்சுமணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடந்த ஆகஸ்ட் 13 ஆம் தேதி மதுரை விமான நிலையம் வந்தார்.
அப்போது அங்கு திமுக மற்றும் பாஜகவினரிடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் வீரரின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அங்கிருந்து புறப்பட்டபோது பழனிவேல் தியாகராஜனின் காரை முற்றுகையிட்டதுடன் காலணியை வீசினா். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு முன்னதாக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, புறநகர் மாவட்ட தலைவர் சுசீந்திரனிடம் பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த ஆடியோவில், ஏற்பாடுகள் தயாராக இருக்கிறதா, நமது ஆட்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என அண்ணாமலை சுசீந்திரனிடம் கேட்க, அதற்கு அவர் ஆயிரம் பேர் இருப்பதாகக் கூறுகிறார். 'இதை வேறு மாதிரி செய்ய வேண்டும், பிடிஆரும் மாவட்டத் தலைவரும் வருகிறார்கள். இதை எப்படி அரசியல் செய்ய வேண்டும் என்று யோசிக்கிறேன்' என்று பேசியுள்ளார்.
இந்த ஆடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.