தஞ்சாவூர், பட்டுக்கோட்டை அருகே விஷ வண்டு தாக்கியதில் ஒன்பது பெண்கள் படுகாயமடைந்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள வெட்டிக்காடு கிராமத்தில் இன்று காலை 100 நாள் வேலைத்திட்டப் பணியில் 50 பெண்கள் ஈடுபட்டு வந்தனர். அப்போது அருகிலிருந்த தென்னை மரத்திலிருந்து கூட்டம் கூட்டமாக வந்த கதண்டு வண்டுகள் வேலை பார்த்துக் கொண்டிருந்த பெண்களைத் தாக்கியது. இதனால் பெண்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர்.
இருந்தும் கதண்டு வண்டுகள் விடாமல் துரத்திச் சென்று தாக்கியது. இதில் பல பெண்கள் தப்பித்துச் சென்ற நிலையில் ஒன்பது பெண்களை தலை மற்றும் கழுத்து பகுதியில் கதண்டு வண்டுகள் தாக்கியது.
இதனை அடுத்து உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்து ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு வந்த நிலையில் வலியால் துடிதுடித்து மயக்கம் அடைந்தும் ஆபத்தான நிலையிலிருந்த அந்த ஒன்பது பெண்கள் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.